மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க
இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ். (பாடல்-11)
மிகப் பெருகி நன்மை மிகுதலான நன்னீர் கடலில் வீழ்ந்தாலும், தன்னிடத்துள்ள உவர்ப்பு நீங்காத ஆரவாரிக்கும் கடலைப்போல், கீழ்மக்கள் மிகவும் நல்லோரினத்தோடு சேர்ந்து வாழும் நன்மையை நன்றாகப் பெற்றிருந்தாலும், எப்பொழுதும் மனத்தின்கண் தூய்மை பெறுதல் இலர். (க.து) கீழ்மக்கள் பெரியார்இணக்கம் பெற்றிருப்பினும் மனச்செம்மை அடையார். "இனநலம் நன்குடையவாயினும் என்றும் மனநலம் ஆகாவாம் கீழ்' என்பது இதில் வந்த பழமொழி.