சங்க இலக்கியங்களிலும், திரைப்படப் பாடல்களிலும் அன்னப் பறவைக்கு சிறப்பானதோர் இடமுண்டு.
ஆனால், அன்னம் மது அருந்தியதால் அதன் பெருமையை இழந்து, சிறுமையடைந்ததை சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர் ஒரு மயிலின் பார்வை மூலம் மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்தியுள்ளார்.
உழத்தியர்கள் வார்த்த மதுவைப் பருகியவர்கள் கலயத்திலிருந்து சிறிது சிந்த, அந்த மதுத் துளிகள் தரையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. அதைப் பருகிய ஆண் அன்னம் மதுவின் மயக்கத்தால் நெறி தவறி இனமறியாது ஒரு கன்னி நாரையை நாடுகிறது. அதைக் கண்ட பெண் மயிலொன்று தனது துணையான ஆண் மயிலுக்கு எச்சரிக்கை விடுப்பதுபோல், "நீயும் மதுவால் மதி மயங்கி உன் பெருமையை இழக்காதே' என்று கூறியதாம். மதுவிலக்குக் கொள்கையைப் பறவைகளின் மூலமாக விளங்க வைத்த பாடல் இது:
"வளைக்கையாற் கடைசியர் மட்டு வாக்கலின்
திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக்
களிப்பவுண்டு இளஅனம் கன்னி நாரையைத்
திளைத்தலிற் பெடைமயில் தெருட்டும் செம்மற்றே'
ஒரு காப்பியத்தின் அமைப்பு சமுதாயத்திற்கு நன்மை பயப்பதாய் இருக்க வேண்டும் என எண்ணி, மது அருந்தினால் பெருமை குலைந்து சிறுமை வந்தடையும் என்பதை ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு நான்கறிவு படைத்த பறவைகள் மூலம் அறிவுறுத்துகிறது.