விழுமிழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும் - தொழுநையுள்
மாலையும் மாலை மயக்குறுத்தாள் அஃதால்
சால்பினைச் சால்பறுக்கு மாறு. (பாடல்-12)
எல்லோரானும் விரும்பப்படும் பொற்கலனணிந்த பெண்களுடைய வெருண்ட மான் போன்ற நோக்கங்கள், (ஆடவருடைய) செறிந்த நாணினைத் தோன்றாமல் மறைக்க வல்லதாம்!, யமுனையின் கண்ணே, திருமாலையும் பின்னை யென்பாள் தன்னழகினால் மயங்கச் செய்தாள்; அது, மிகுதியினை மிக்க தொன்றனால் அறுக்கு மாற்றை ஒக்கும். (க-து) அறிவான் மிக்கார் மகளிரைச் சார்ந்தொழுகல் கூடாது. "சால்பினைச் சால்பறுக்கு மாறு' என்பது இதில் வந்த பழமொழி.