நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில் சோலை மலைநாட! என்றும்
குரங்கினுள் நன்முகத்த இல். (பாடல்-58)
மரங்கள் மிக்குச் செறிந்த சோலைகள் சூழ்ந்த மலைநாட்டிற்கு உரியவனே! குரங்கினங்களுள் நல்ல முகத்தை உடையவை இல்லை. (அதுபோல) பெருகி வழிவழியாக வந்த, தீய குணமுடையா ரெல்லாருள்ளும், பெருக ஆராய்ந்து, ஒருவரைத் தேறும்பொழுது, நல்ல குணமுடையார் காணப்படார். (க-து.) கீழ்மக்களுள் நல்லோர் காணப்படார். "குரங்கினுள் நன்முகத்த இல்' என்பது பழமொழி.