எடக்கு... மடக்கு... தடுக்கு!

மடக்கு என்பது ஓர் எல்லையோடு நின்று திரும்பி வருவதாகும். பாடலுக்கு அழகு சேர்ப்பது அணி. அவ்வணியில் வந்த சொல் மீண்டும் மீண்டும் மடங்கி வருதலே அணியில் மடக்கு என்பர். இதனை வடநூற் புலவர்கள் 'யமகம்' என்பர்
எடக்கு... மடக்கு... தடுக்கு!

மடக்கு என்பது ஓர் எல்லையோடு நின்று திரும்பி வருவதாகும். பாடலுக்கு அழகு சேர்ப்பது அணி. அவ்வணியில் வந்த சொல் மீண்டும் மீண்டும் மடங்கி வருதலே அணியில் மடக்கு என்பர். இதனை வடநூற் புலவர்கள் 'யமகம்' என்பர்.
சங்கப் புலவர்கள் இலக்கணம் யாப்பதற்கு முன்பே நம் உழவர் பெருமக்கள் உழவு செய்யும்போது, உழுத பகுதியை சால், விளா, மடக்கு என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
பனையோலைப் பெட்டி முடையும் ஒருத்தி, தன் வாழ்க்கையைப் பாடலாகப் பாடிக்கொண்டே பெட்டியை முடைகிறாள். எட்டுப் பெண்மக்கள் அவளுக்கு; திசைக்கு இருவர் வீதம் திருமணமாகிச் சென்றுவிட்டனர்; இப்பொழுது யாரும் தாய் வீட்டுக்கு வருவதில்லை. எட்டுவரி ஓலைக் குட்டான்(பெட்டி) மடக்காகக் கீழ்க்காணும் பாடலைப் பாடுகின்றாள் அப்பெண்.

'சாரைக் குருத்தெடுத்துச் சண்டாளன் பேரைச்சொல்லி 
வடக்கெ திருப்பிவச்ச வண்ணோலைப் பொட்டி ரெண்டு
தெக்கெ திருப்பிவச்ச தென்னோலைப் பொட்டி ரெண்டு
கெழக்கெ திருப்பிவச்ச கீழோலைப் பொட்டி ரெண்டு
மேருக்கெ திருப்பிவச்ச மேலோலைப் பொட்டி ரெண்டு
எடக்கு! மடக்கு! தடுக்கு! கெடக்கு!' 

இப்பாடலை நம் நாட்டு உழைக்கும் மக்கள் இன்றும் பாடி வருவதைக் காணலாம். இப்பாடலில் வரும் சாரைக் குருத்து என்பது ஒன்றுக்கும் உதவாத நிலையிலுள்ள பனையோலைக் குருத்தாகும். இப்பாடலின் பொருள்: 'எடக்கு - துன்பம்; மடக்கு - ஓலைப் பெட்டியின் மூலை, மடக்குவது; தடுக்கு - ஓலைத் தடுக்கு; கெடக்கு - அது கிடக்கட்டும் கவலையை விடு' என்பதாம்.
பெண் மக்களை ஓலைப் பெட்டிக்கும் சாரைக் குருத்தைக் கணவனுக்கும் வைத்து ஏற்றிப் பாடுகிறாள். இவ்வாறு, தன் வாழ்க்கையின் நிலைப்பாட்டைப் பாடலாகப் பாடிவரும் உழைப்பாளர் பாடல்களை அடிப்படையாகக் கொண்டே புலவர்கள் 'மடக்கு' என்னும் அணியில் பாடல்களைப் புனைந்திருக்க வேண்டும்! இவ்வகையில் குற்றுயிர் மடக்காகச் சேந்தன் பனையவயல் சிவக்கவிராயர் பாடலொன்றை ஈண்டு காணலாம். 
'அமரரமர மதுர சதுர வரக வரத பரவ
அமரகமல ரயிர நகர
அடரவசுர ரசர
அகோர வீர கவர'
இப்பாடலின் பொருள்: 
அமரரமர - தேவர்களுக்கெல்லாம் தலைவனே!
மதுர சதுர - இனிமையான நான்மறைகளும் போற்றக் கூடிய சிவனே!
வரக வரதபரவ - வராக அவதாரமெடுத்த வரதராசப்பெருமாள்(திருமால்) உன்னை வணங்க!
அமரகமலர் - தாமரை மலரில் வீற்றிருக்கும் முப்பெரும் தேவியர் (மலைமகள், அலைமகள், கலைமகள்)
அயிர நகர - அயிராணியாகிய இந்திராணி(இந்திரனின் தேவி) பயந்தோட;
அடரவசுரர் - போர் செய்த தக்கன் முதலாய அசுரர்கள் 
அசர - தோல்வியுறும் படியாக
அகோர வீர - அகோர வீரபத்திரர்
கவர - தக்கனுடைய தலையைக் கொய்து கொன்றார்.
இதன் பொருள்: சிவபுராணத்தில் சொல்லப்பட்ட, சிவனால் அனுப்பப்பெற்ற வீரபத்திரனாகிய வீரன் தக்கன் வேள்வியை அழித்து, தக்கனைப் போரில் கொன்ற செய்தியாகும். இஃது அகரமாகிய குற்றுயிர் மெய்களுடன் கூடி இப்பாடல் முழுதும் மடங்கி வந்துள்ளதால், குற்றுயிர் மடக்காகும். மேலும், இக்கவிராயர் பாடிய,

'பாடிப் பாடிப் பாடிப்பாடி பாடியவர் ஒருவரே!
தேடித் தேடித் தேடித் தேடித் திரும்பியவர் இருவரே!
ஓடி ஒடி ஓடி ஓடி ஒளிந்தவர்கள் மூவரே!
நாடி நாடி நாடி நாடி நத்தியவர் கோடியே!'

எனும் இப்பாடல், முதல் முற்று, ஈற்று ஏகார மடக்கு அணியில் அமைந்துள்ளது. இதன் பொருள்:
ப் பாடவே தெரியாத நாரதர் ஒவ்வொருவரிடமும் சென்று பாடங்கேட்டு, இறுதியில் கானபந்து முனிவரிடம் (கோட்டான்) இசைபயின்று, இசை ஞானியானார் (நாரத புராணம்)
ப் சிவபெருமானின் திருவடி தேடித் திருமாலும், திருமுடி தேடிப் பிரமனும் சென்று காணாது திகைத்துத் திரும்பினர் (சிவமகா புராணம்) 
ப் சிவபெருமான் பொருட்டுத் தக்கனொடு போர் புரிந்த வீரபத்திரனைக் கண்டு முப்பெருந்தேவியரும் ஓடி ஒளிந்தனர்.
ப் சிவபெருமானின் திருவடிகளை நாடி வணங்கி, பக்திப் பெருக்கோடு அருள்பெற்ற அன்பர்கள் கோடிக்கணக்கானவர்களாவர்.
நந்தமிழ் புலவர்கள் சருக்கரையைப் பாவாகக் காய்ச்சி ஊற்றிய 'மடக்கு' என்கிற இனிப்புப் பண்டம் ஈண்டு குறிப்பிடத்தக்கது! 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com