சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர் நல்குரவு நன்றே - தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முதுநெய்தீ(து) ஆகலோ இல்.. (பா-70)
தேன் மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட கலன்களையுமுடையாய்! ஆராய்ந்தால், புதிய மோரினைவிடப் பழைய நெய் தீது ஆவதில்லை. (நன்மையே பயக்கும்). அறிவிற் சிறியார் பெற்ற செல்வத்தைவிட, அறிவுடையோர் எய்திய வறுமை மாட்சிமைப்பட நல்லதே யாகும். (க-து) அறிவிலார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் பெற்ற வறுமையே மிகச் சிறந்தது. "மோரின் முதுநெய் தீது ஆகலோ இல்' என்பது பழமொழி.