பழமொழி நானூறு
வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயோர்
புன்பாட் டவர்பகை கோடல் பயனின்றே
கண்பாட்ட பூங்காவிக் கானலந் தண்சேர்ப்ப!
வெண்பாட்டம் வெள்ளந் தரும். (பா-71)
கண்களின் தகைமையாயுள்ள அழகிய நீலப்பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடல் நாடனே! பருவ மழையன்றி வேனிற்காலத்து வெண்மழையும் மிகுந்த நீரைத் தருமாதலால், மேலானவர்கள் வலிய தகைமை உடையாரோடு மாறுபாடு கொள்ளினும்; எளிய தகைமை உடையாரோடு பகைகொள்ளுதலால் ஒரு பயனும் இன்று. (க-து.) அரசன் வலியுடையாரோடு பகை கொள்வானாயினும் அஃதில்லாரோடு கொள்ளற்க என்றது இது. "வெண்பாட்டம் வெள்ளந் தரும்' என்பது பழமொழி.