காஞ்சிபுரம் அருகிலுள்ள இலம்பையங்கோட்டூரில் சற்று மாறுபட்ட அழகிய தோற்றமுடைய தட்சிணாமூர்த்தி காணப்படுகிறார். அமைதி கொஞ்சும் எழில் முகம், தீச்சுடர், சின்முத்திரை மார்போடு பொருந்த சின்முத்திரையின் உட்பொருளை நெஞ்சில் நிறுத்த வேண்டும் என அறிவிப்பது போன்று சுவடியேந்தி முயலகனை மிதித்துக் காணப்படுகிறார்.
* கரூர் மாவட்டம், திருமங்கலம் என்னும் ஊரில் "ஸ்ரீ அருவங்கரை அம்மன்' கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அம்மன் சிலையே கிடையாது. விநாயகர், முருகர் போன்ற சாமி சிலைகள்தான் உள்ளன. மேலும் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் இக்கோயிலினுள் பெண்கள் செல்ல அனுமதி இல்லை. பெண் குழந்தைகள்கூட கோயிலினுள் நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் வழிபட வேண்டும்.
* சிவாலயங்கள் கிழக்கு முகமாகத்தான் அமைய வேண்டும் என்பதில்லை. திருவானைக்கா, திருக்கண்டியூர், வைத்தீஸ்வரன் கோயில், மயிலாப்பூர் ஆகிய கோயில்கள் மேற்கு முகமாக அமைந்துள்ளன. திண்டிவனம் அருகில் உள்ள முள்ளூர் கோயில் தெற்கு முகமாக அமைந்துள்ளது. காசிவிசுவநாதர் கோயிலில் நான்கு திருவாயில்கள் உள்ளன.
* சரஸ்வதியை வழிபட்டால் கல்வி கிடைக்கும். லட்சுமியை வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. ஆனால் காமாட்சியை வழிபட்டால் இரண்டுமே கிடைக்கும். "கா'என்பது "கல்வி' என்றும் "மா' என்றால் லட்சுமி என்றும் பொருள்படும்.
* பிறர் காதில் விழும்படி ஜபம் செய்வது "வாசிகம்' எனப்படும். இது ஒரு மடங்கு பலனைத்தரும். தனக்கு மட்டும் கேட்கும்படி ஜபம் செய்வது "உபாம்சு' எனப்படும். இது நூறு மடங்கு பலனைத் தரும். மனதால் மட்டுமே ஜபிப்பது "மானஸம்' எனப்படும். இது ஆயிரம் மடங்கு பலனைத்தரும்.
- ஜி.மஞ்சரி