தடைகளை நீக்கியருளும் திருவருட்காளீஸ்வரர்!

மலையில் கோயில் என்ற பெயர் தற்போது மலையக்கோயில் என மருவி வழங்கப்படுகிறது.
தடைகளை நீக்கியருளும் திருவருட்காளீஸ்வரர்!

மலையில் கோயில் என்ற பெயர் தற்போது மலையக்கோயில் என மருவி வழங்கப்படுகிறது. மலையின் மீது ஒரே சுற்று மதிலுக்குள் முருகப்பெருமானுக்கும் முருகனது இணையடி பற்றி நின்ற இடும்பனுக்கும் எழுப்பப்பட்ட கோயில்கள் ஒரு குறுக்குச் சுவரால் தனித்தனிக் கோயில்களாகக் காட்சியளிக்கின்றன. மலையின் மீதுள்ள கோயில் மேற்கோயில் என்றும் மலையின் கீழுள்ள கோயில் கீழ்க்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கோயிலுக்கு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சாரப்பாதை, படிவெட்டுப்பாதை என்ற இருவேறு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மலையின் அடிவாரத்தில் கிழக்குப் பக்கத்தில் ஒன்றும், தெற்குப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. அவற்றில் தெற்குக் குடவரை கோயிலுக்கு எதிரில் ஆடவல்லானான சிவபெருமானின் தேவியாகிய உமையவளுக்கு கற்கோயில் அமைந்துள்ளது. தெற்கு குடவரைக் கோயில் கருவறையையும் கருவறைக்கு முன்பாக முன் மண்டபத்தையும் அம்மண்டபத்தை ஒட்டி மகாமண்டபத்தையும் உடையதாகும்.

கிழக்கு குடவரைக் கோயில் ஒரே கருவறையையும் கருவறையின் நடுவில் ஆவுடையாருடன் கூடிய லிங்கத்தையும் கொண்டதாகும். இக்கோயிலுள்ள சிவலிங்கம் மலைப்பாறையிலேயே செதுக்கப்பட்டதாகும். முன் மண்டபத்தில் கிழக்கு நோக்கிய வலம்புரி விநாயகரும் மலைப்பாறையில் வடிக்கப்பட்டுள்ளது. இவ்விநாயகர் பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகரின் வடிமைப்புக்கு இணையானதாக சொல்லப்படுகிறது.

கிழக்குக் குடவரைக்கோயிலின் வாயிற்படிக்கு தென்புறத்தில் பல்லவ கிரந்த எழுத்தமைவில் ஒரு கல்வெட்டும் வாயிற்படிக்கு வடக்கில் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியனின் ஒரு கல்வெட்டும் காணப்படுகிறது. தெற்குக் கல்வெட்டு பரிவாதினி என்ற வீணையைப்பற்றிய சிறு குறிப்பை காட்டுகிறது. இது போன்று கல்வெட்டு குறிப்பு குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்குடவரை கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டிற்குரியனவாகக் கருதலாம். இவ்விரு குடவரையிலுமுள்ள குலசேகரபாண்டியன், இரண்டாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களிலிருந்து மலையக்கோயில் கானாட்டிற்கும் கோனாட்டிற்கும் பொது எல்லையில் அமைந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. இக்காரணம் பற்றியே, கிழக்குக் குடவரை கானாட்டை நோக்கியவாறு கிழக்கு நோக்கியும், தெற்குக் குடவரை கோனாட்டை நோக்கியவாறு, மேற்கு நோக்கியும் வடிமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசையில் இருக்கும் இந்த சிவனை வேண்டினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். அதைவிட ஒவ்வொரு பிரதோஷம் நாளில் அந்த சிவனையும் அதற்கு எதிரே உள்ள வலம்புரி விநாயரையும் வேண்டினால் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடைபெறும் என்பது ஐதீகம்! இவ் இறைவன் திருவேங்கை கனலீசுபவர், மலையலிங்கம் என்றழைக்கப்பட்டு இன்று, திருவருட்காளீஸ்வரர் எனப்படுகிறார். அம்மனுக்குரிய கற்கோயில் வடக்கு நோக்கிய நிலையில் பிற்காலச்சோழர்களது கலைப்பாணியில் அமைந்துள்ளது. இவ்வம்மை தம்பிராட்டி, அறம்வளர்த்தநாயகி, தற்போது தர்மசம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார்.

மலையில் அருளும் சுப்பிரமணியசுவாமி கிழக்கு நோக்கிவாறு அமைந்துள்ளார். ஜடாமுனீஸ்வரர் தெற்கு நோக்கி உள்ளார். இப்படி ஒவ்வொரு தெய்வங்களும் திசைமாறிய தெய்வங்களாக இக்கோயிலில் வீற்றிருப்பது வியக்கத்தக்கது! சிவன், அய்யனார் போன்ற சைவக்கோயில்களுக்கு நிலத்தை தானமாக அளிக்கும்போது அந்நிலம் கோயில் நிலம் என்பதற்கு அடையாளமாக சூலக்கல் நடுவது மரபாகும். மலையக்கோயிலில் சமணப்பள்ளி ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதையும் அறியமுடிகிறது.

புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து எண்: 6ஏ மலையக்கோயிலுக்கு நேரடியாக செல்கின்றது.
தொடர்புக்கு: 98430 28576 / 97512 39014.
- பொ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com