* திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கு தூதுவளைக் கீரையும் பாகற்காயும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
* நவதுர்க்கா தலங்களில் ஒன்று கதிராமங்கலம். குத்தாலத்துக்கும் நரசிங்கன் பேட்டைக்கும் இடையே உள்ளது. காவிரி, உத்தரவாகினியாக ஓடுகிறாள். இங்குள்ள, அன்னை, வனதுர்க்கையாக காட்சி தருகிறாள். மிருகண்டு முனிவரால் பூஜிக்கப்பட்டவள். இவளது அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர் கம்பர்.
* தாழம்பூவின் நுனியில் லட்சுமியும் நடுவே சரஸ்வதியும் காம்பில் மூதேவியும் உள்ளதாக நம்பப்படுகிறது. அடிமுடி காண சென்று ஈசனின் முடியைக் கண்டு விட்டதாகப் பொய் சொன்ன பிரம்மனுக்கு சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். பிற பூஜையில் அதன் காம்பினை அகற்றிய பிறகு சமர்ப்பிப்பார்கள்.
* காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயம், சிவனை சரஸ்வதி பூஜித்து பேறு பெற்ற திருத்தலமாகும். இங்கு, சரஸ்வதி தேவிக்கு தனி சந்நிதி உண்டு.
* நாகை மாவட்டம், கொள்ளிடத்திற்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஆச்சாள்புரம். திருஞானசம்பந்தப்பெருமான் தமது துணைவியார் தோத்திரப் பூர்ணாம்பிகையுடன் திருமண நாளிலேயே சிவஜோதியில் கலந்த திருத்தலம். ஞானசம்பந்தரின் காலத்தில் பேதமின்றி யாவருக்கும் விபூதி வழங்கி சிவனடியார்களை ஜோதியிலும் புகச் செய்தாள் அம்மை. இன்றும் இத்தலத்தில் அம்பாள் சந்நிதியில் விபூதியைப் பிரசாதமாக கொடுத்த பின்பே குங்குமப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
- ஆர்.கே. லிங்கேசன்