சாம்பற்புதனில் ஆரம்பித்து புனித வெள்ளி வரை உள்ள காலங்கள் தவக்காலம் என்று கூறுகிறோம். இந்த தவக்காலத்தில் சிலர் வெள்ளிக்கிழமை மாத்திரம் உபவாசம் இருப்பர். சிலர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் உபவாசம் இருப்பர். ஆனால் சிலர் அனைத்து நாள்களிலும் உபவாசம் இருப்பதும் உண்டு. சரி. பரிசுத்த வேதாகமத்தில் இந்த உபவாசம் இருப்பது எப்படி? இதன் பயன் என்ன? என்பது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
உபவாசம்,தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த உலக காரியங்களில் இருந்து நமது கண்களை விலக்கி தேவன் மேல் முழு கவனம் செலுத்துவதாகும். அது தேவனோடிருக்கும் நமது உறவை நாம் மிகவும் முக்கியமாக கருதுகிறோம் என்பதை தேவனுக்கு வெளிப்படுத்தும் ஒன்றாய் இருக்கிறது. உபவாசத்தின் மூலமாக நமக்கு தேவனை குறித்த புதிய கண்ணோட்டம் கிடைக்கிறது மற்றும் அவர் மேல் நமது நம்பிக்கை புதுப்பிக்கப்படுகிறது.
தேவன் உபவாசத்தைப் பற்றி ஏசாயா 58:6,7 ஆகிய வசனங்களில், "அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டில் சேர்த்துக்கொள்கிறதும் வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங்கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்'' என்று கூறுகிறார்.
மேலும் இயேசு மத்தேயு 6:17,18 -இல் "நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும் படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.'' என்று கூறுகிறார்.
இந்த வசனங்களின் அடிப்படையில் நாம் உவாசிக்கும்போது, ஏசாயா 58:8-11 வரையுள்ள வசனங்களில் குறிப்பிட்டுள்ளதுபோல, விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னை பின்னாலே காக்கும், என்றும் நீ கூப்பிடுவாய் நான் உனக்கு மறுஉத்தரவு கொடுப்பேன் என்றும் கூறுகிறார்.
மேலும் கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, திடப்படுத்துவார். நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப்போலவும் செழிப்பாய் இருக்கச் செய்வார். ஆகவே தேவன் விரும்புகிறபடி உபவாசம் இருப்போம் அவர் நமக்கு தரும் நன்மைகளை அடைவோம்.
- ஒய்.டேவிட் ராஜா