தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2017: முதல் நான்கு ராசிகளுக்கானது! (ராகு - கேது பெயர்ச்சியை உள்ளடக்கியது)

தமிழ் ஆண்டுகள் பிரபவ முதல் அட்சய வரை அறுபது என்பது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் 31 ஆம் ஆண்டான ஹேவிளம்பி,
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2017: முதல் நான்கு ராசிகளுக்கானது! (ராகு - கேது பெயர்ச்சியை உள்ளடக்கியது)

தமிழ் ஆண்டுகள் பிரபவ முதல் அட்சய வரை அறுபது என்பது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் 31 ஆம் ஆண்டான ஹேவிளம்பி, இந்த சித்திரை மாதம் முதல் தேதி (14.4.2017) உத்திராயண புண்ணிய காலம், வசந்த ருது, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) திருதியை திதி வியாழக்கிழமை பின்னிரவு விடிந்தால் வெள்ளிக்கிழமை 02.07 (ஐஎஸ்டி) அளவில் விசாக நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் துலாம் ராசியில் மகர லக்னத்தில் சனிபகவானின் ஹோரையில் பிறக்கிறது.

இந்த ஆண்டு ஆனி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பின்னிரவு (விடிந்தால் புதன்)21-6-2017அன்று 04.49 (ஐஎஸ்டி) மணிக்கு சூரியபகவானின் ஹோரையில் சனிபகவான் அதிவக்கிர கதியில் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இங்கு சனிபகவான் ஐப்பசி மாதம் 8 ஆம் தேதி (25.10.2017) வரை சஞ்சரித்து விட்டு ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 03.32 (ஐஎஸ்டி) மணிக்கு சூரிய ஹோரையில் விருச்சிக ராசியிலிருந்து (அதிவக்கிர சஞ்சாரம் முடிந்து) தனுசு ராசிக்கு மறுபடியும் பெயர்ச்சி ஆகிறார். இந்த ஆண்டு ஆவணி மாதம் 24 ஆம் தேதி (9.9.2017) சனிக்கிழமை இரவு 20.41 (ஐஎஸ்டி) மணிக்கு சனிஹோரையில் ராகு/கேது பகவான்கள் சிம்ம, கும்ப ராசியிலிருந்து முறையே கடக, மகர ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இந்த ஆண்டு ஆவணி மாதம் 27 ஆம் தேதி (12.9.2017) செவ்வாய்க்கிழமை காலை 07.00 (ஐஎஸ்டி) மணிக்கு செவ்வாய் ஹோரையில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த ஹேவிளம்பி விஷு புத்தாண்டு பலன்கள் இந்த ராகு- கேது, குரு சனிபகவான்களின் சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டும் எழுதப்பட்டுள்ளது.

வாசகர்கள் அனைவருக்கும் ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த ஹேவிளம்பி ஆண்டின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியாக சனிபகவான் வருகிறார். சனிபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்று நவாம்சத்தில் தன் நட்பு வீடான ரிஷப ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய கர்மாதிபதியான சுக்கிர
பகவான் உச்சம் பெற்று நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ஆறு மற்றும் பாக்கியாதிபதியான புதபகவான் சூரியபகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். தைரிய மற்றும் அயன ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சுக லாபாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். கேது -ராகு பகவான்கள் குடும்ப, அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் முறையே தனுசு, மிதுன ராசிகளை அடைகிறார்கள். லக்னாதிபதியாக சனிபகவான் வருவதால் இந்த ஆண்டு அனைவரும் கடினமாக உழைத்து முன்னேற வேண்டி வரும். சனிபகவானை நீதிபதி என்று கூறுவார்கள். அவர் பன்னிரண்டாம் வீட்டில் (குருபகவானின் வீட்டில்) இருப்பதால் வெளிநாடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் தீர்ந்துவிடும். வெளிநாட்டு வங்கிகளில் இருந்த பணம் நம் நாட்டிற்கு வந்து சேரும். வெளிநாடுகளுடன் வரி தொடர்பான ஒப்பந்தங்கள் நமக்கு சாதகமாக கையொப்பமாகும். எவ்வளவுக்கெவ்வளவு நேர்மையாக கடினமாக உழைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு பயனைத் தருபவர் சனிபகவானாவார். உழைப்புக்கு பின்வாங்கக் கூடாது. சமூக சேவை செய்பவர்கள் முன்னேறுவார்கள். 

பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் உச்சம் பெற்றிருக்கிறார். அவர் பூர்வபுண்ணிய காரகரான சூரியபகவானால் பார்க்கப்படுகிறார். இதனால் சுக்கிரபகவானின் காரகத்துவம் பெற்ற தொழில்கள் வளர்ச்சி அடையத் தொடங்கும். குறிப்பாக, நகைத்தொழில், தங்கம், வெள்ளி, கவரிங், சிமெண்ட், பெயிண்ட், இரும்பு, கம்பி, பெட்ரோலியம் ஆயில், வாகன உதிரிபாகங்கள், மருந்துக் கடை சில்லரை, மொத்த வியாபாரம் ஆகிய துறைகள் சிறப்பாக வளர்ச்சி அடையும். பாக்கியாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து நட்பு ஸ்தானாதிபதியை சமசப்தம பார்வை செய்வதால் வியாபார விஷயங்களில் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும். உலக வர்த்தக சங்கத்தில் நமது உரிமைகள் நிலை நாட்டப்படும். நான்காமிடமும் சனிபகவானும் வலுத்திருப்பதால் விவசாயம் மேன்மையடையும். புத, சுக்கிர, சனிபகவான்கள் யோக காரகர்களாக அமைந்து வலுவாக இருப்பதால் கேளிக்கைத் துறை ஏற்றம் பெறும். குறிப்பாக, இந்த துறைகளில் உலகளவில் விருதுகள் கிடைக்கும். அதனால் இந்த ஆண்டு சண்டைச் சச்சரவு இன்றி அமைதியாகக் கழியும் என்றால் மிகையாகாது.

ராகு / கேது பகவான்கள் முறையே கரும்பாம்பு, செம்பாம்பு என்று கூறுவார்கள். இவர்கள் தாம் அமர்ந்த வீடுகளை சொந்தமாக்கிக் கொள்கிறார்கள். அதனால் அந்த வீட்டுக்கதிபதிகளின் தன்மைக்கேற்ப பலனளிப்பார்கள். இவர்கள் யாருடன் இணைந்திருக்கிறார்களோ அந்தக் கிரகங்களும் இந்த சர்ப்பக் கிரகங்களின் குணத்தோடு ஒத்துப் போக வேண்டியுள்ளது. இவர்கள் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால் அஷ்டமஹா நாகயோகத்தைப் பெறுகிறார்கள். மற்றபடி இவர்கள் தனித்தே இருந்தால் நலம் ஓங்கும். பொதுவாக, இவர்கள் லக்னத்திற்கு 3,6,11 ஆம் இடங்களில் இருப்பது நல்லது. ராகு-பகவானை பிதாமஹரைக் (தந்தையின் தந்தை) குறிப்பார் என்றும்; கேதுபகவானை மாதாமஹரைக் (அன்னையின் தந்தை) குறிப்பார் என்றும் கூறுவார்கள். ராகுபகவானைப் பற்றிய ஒரு ஜோதிட வழக்கே உள்ளது.

ஆ மேட எருது சுறா நண்டு கன்னி

ஐந்திடத்துங் கருநாகம் அமர்ந்திடவே

பூமேடை தனில் படுத்துறங்கும் ராஜயோகம்

என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த கடக ராகு/ மகர கேது பெயர்ச்சி தனித்தன்மையை பெறுகிறது.

பொதுவாகவே, ராகு / கேது பகவான்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கைப் பாடங்களையும் அனுபவங்களையும் மேன்மையையும் கொடுக்கிறார்கள். ராகுபகவானை போககாரகர் என்றும் கேதுபகவானை மோட்சக்காரகர் என்றும் கூறுகிறார்கள். மோட்சக் காரகர் என்பதால் செல்வத்தைக் கொடுக்கமாட்டார் என்று இல்லை. திடீர் அதிர்ஷ்டத்தையும் அதை திடீரென்று பறித்து கொள்வதும் இவர்களுக்குக் கைவந்த கலை. அதனால் மேற்கூறிய ஜோதிட வழக்கு கேதுபகவானுக்கும் பொருந்தும் என்பது எங்கள் கருத்தாகும்.

இந்த ஆண்டு ஆவணி மாதம் 24 ஆம் தேதி (9.9.2017) அன்று ராகு- கேது பகவான்கள் முறையே, கடக/ மகர ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இதனால் ரிஷபம், கும்பம், கன்னி ராசிகள் ராகுபகவானின் சஞ்சாரத்தாலும் விருச்சிகம், சிம்மம், மீன ராசிகள் கேதுபகவானின் சஞ்சாரத்தாலும் நன்மையடைகின்றன. பத்தில் ஒரு பாபி என்கிற ரீதியில் பார்த்தால் மேஷம், துலாம் ராசிகளும் பயனடைகின்றன. இது ஒன்றரை ஆண்டுகள் 22.3.2019 வரை சஞ்சரித்துவிட்டு 23.3.2019 அன்று மாலை 04.14 (ஐஎஸ்டி) முறையே மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். அதோடு சூரியபகவானுடன் இணையும் கிரகங்களில் ராகு - கேது பகவான்களைத் தவிர மற்ற ஆறு கிரகங்களும் அஸ்தாங்கத தோஷத்தை அடையும். பொதுவாக, ராகு- கேது பகவான்கள் தசா புக்தியின் பிற்பகுதியில் பலன் தருவார்கள்.

மேஷம் 

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் வருமானம் உயரத் தொடங்கும். பழைய கடன்கள் அடையத் தொடங்கும். மனதில் இருந்த கவலைகள் மறையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் செயல்களைத் திருப்தியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். உங்களின் முக்கியமான செயல்களுக்கு அடுத்தவர்களின் தயவை நாடமாட்டீர்கள். சரியான முடிவை எடுக்கத் திணறும் நண்பர்களுக்கு உங்கள் அறிவுரைகளுடன் தேவையான உதவிகளையும் செய்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் நிலை உயரும். செல்வம் செல்வாக்கு இரண்டும் சீரிய நிலையில் இருக்கும். உங்களின் அனுபவ அறிவு தக்க சமயத்தில் கை கொடுக்கும். பரமபத பாம்புபோல் அவ்வப்போது சரிவைச் சந்தித்தவர்கள் பரமபத ஏணியில் திடீரென்று ஏறி உயர்ந்த நிலையை அடைந்து விடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். பெற்றோர்களாலும் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆன்மிக விஷயங்களில் அதீத ஈடுபாடு உண்டாகும். பெரியோர்களிடம் நல்ல மதிப்பு வைப்பீர்கள். உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் இருந்த சஞ்சலங்கள் மறைந்து தெளிவுடன் காரியமாற்றுவீர்கள். அறிவாற்றலும் நிர்வாகத் திறமையும் உயரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் ஆன்மிகச் சிந்தனைகளால் சிறப்படைவீர்கள். தோற்றத்தில் புதிய மிடுக்கு உண்டாகும். முகத்தில் பொலிவு கூடும். வாழ்க்கையில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். உங்கள் பேச்சினால் மற்றவர்களைக் கவர்ந்து விடுவீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உண்மையை பேசுவீர்கள். குடும்பத்தாருடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்வீர்கள். உறவினர்களுக்கிடையே இருந்த பிணக்குகளை உங்களின் சமயோசித பேச்சுகளால் தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் திரும்ப வந்து சேர்வார்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர், கௌரவம், அந்தஸ்து உயரக் காண்பீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசியையும் தேடிப் பெறுவீர்கள். நெடுநாளாகத் தீராமல் இருந்த வழக்குகளிலும் சாதகமானத் தீர்ப்பு கிடைக்கும். மற்றபடி சோதனைகளைக் கடந்து சாதனையாளராக வலம் வரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்களின் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். உங்கள் செய்கையால் சக ஊழியர்களிடம் நம்பகத் தன்மையை அதிகரித்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைத்து பொருளாதார நிலை சீரடையும். வேலையில் தொடர்ந்து வந்த கெடுபிடிகள் குறையக் காண்பீர்கள். புதிய பொறுப்புகளையும் மேலதிகாரிகள் கொடுப்பார்கள். பதவி உயர்வும் இந்த ஆண்டு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் நடவடிக்கைகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். விவசாயிகள் அமோகமான விளைச்சளைக் காண்பார்கள். சக விவசாயிகள் தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவார்கள். புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு உயரும் ஆண்டாக இது அமைகிறது.

அரசியல்வாதிகள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்தால் கட்சித் தலைமையின் வெறுப்பிலிருந்து தப்பிக்கலாம். தொண்டர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவு கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் திரும்ப கைவந்து சேரும். தோற்றத்தில் பொலிவு கூடும். மிடுக்கான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். பெண்மணிகள் வீட்டில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். கணவருடனான ஒற்றுமையும் சீராக இருக்கும். மாணவமணிகள் நண்பர்களிடம் கவனத்துடன் பழகவும். படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நெடுநாளைய கோரிக்கை ஒன்றைப் பூர்த்தி செய்வீர்கள்.

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை வழிபட்டு நலன்களைக் கூட்டிக்கொள்ளுங்கள்.

***

ரிஷபம்

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் வரவேண்டிய பணம் தானாகவே கைவந்து சேரும். கடமைகளை கருத்துடன் செய்து முடிப்பீர்கள். சுதந்திரமாக சுயசிந்தனையோடு முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுவீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் குறைந்து காணப்படும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் சென்று அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே முடித்துவிடுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் அனுபவஸ்தர்களைக் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, கௌரவம் உயரக் காண்பீர்கள். நேர்முக மறைமுக எதிரிகள் இந்த காலகட்டத்தில் உங்களை அண்ட மாட்டார்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். பழைய காலத்தில் தொடங்கி பாதி வழியில் விட்டிருந்த தொழிலையும் புதுப்பித்து நடத்துவீர்கள். புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். உங்கள் செயல்கள் சிறு தடைகளைச் சந்தித்தாலும் அவைகள் சரியான இலக்குகளை அடைந்து விடும். உடலில் இருந்த நோய்கள் மறைந்து பீடுநடை போடுவீர்கள். உணவு விஷயங்களில் சரியாக இருப்பீர்கள். பழைய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து விடுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து நேர்வழியில் சிந்தித்துப் பணியாற்றுவீர்கள். குழந்தைகளை வெளியூர் வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அரசு வழியில் இருந்த பிரச்னைகளும் தீர்ந்துவிடும். கடினமான சூழல்களில் மாட்டிக் கொண்டாலும் கடைசி நிமிடத்தில் எச்சரிக்கையடைந்து அவைகளிலிருந்து தப்பித்து விடுவீர்கள். "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று' என்பது போல் இன்னல்கள் விலகும். உங்கள் பேச்சில் கண்ணியத்தைக் காப்பாற்றுவீர்கள். உடல் பலத்தைவிட மனபலம் அதிகரிக்கும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் சகோதர சகோதரிகள் உங்களைத் தேடி வந்து உதவிகளைச் செய்து மகிழ்ச்சியில் திளைக்கச் செய்து விடுவார்கள் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஹேவிளம்பி ஆண்டில் அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில் பளு கூடாது. மேலதிகாரிகள் உங்களின் வேலையில் திருப்தி அடைவார்கள். முன்னறிவிப்பில்லாத சில வேலைகளையும் ஒப்படைப்பார்கள். இதனால் சிறிது அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாக நேரிடும். வியாபாரிகள் நல்ல முறையில் வியாபாரம் செய்து முன்னேற்றத்தைக் காண்பார்கள். வீண் பிரச்னைகளில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அவைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். நண்பர்கள் கூட்டாளிகள் நல்ல விதமாக உதவிகளைச் செய்வார்கள். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் தங்களின் வியாபாரம் மூலம் அந்நியச் செலாவணியையும் அதிகம் பெறுவார்கள். விவசாயிகளுக்கு மகசூலில் ஓரளவு லாபம் கிடைக்கும். புதிய தானியங்களைப் பயிரிட்டும் பயன் அடையலாம். மாற்றுப் பயிர்களாலும் கால்நடைகளாலும் வருமானம் கூடும். நீர்ப்பாசன வசதிகளையும் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். மதிப்பு மரியாதை உயரும். அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சி மேலிடம் உங்களின் செயல்களைப் பாராட்டும். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களும் புதிய வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். பெண்மணிகளுக்கு உடல்நலனில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய மருத்துவச் செலவுகள் உண்டாகாது. கணவர் வழி உறவினர்களின் மத்தியில் உங்கள் புகழ் உயரும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். வெளிவிளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். விரும்பிய பாடப் பிரிவுகளிலும் சேர்வீர்கள்.​

பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வரவும்.

***

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பெற்றோர் வழியில் சிறப்பான உறவுகள் தொடரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சிகரமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருப்பதால் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய கஷ்டங்களை மறந்து புது நம்பிக்கையுடன் செயலாற்றத் தொடங்குவீர்கள். புதிய தொழில் முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டு விலக்குவீர்கள். மனஅமைதியுடன் பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடந்து உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்கும். அவ்வப்போது மன அழுத்தங்களுக்கு சிலர் ஆளாவார்கள். சகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மேலும் எவருக்கும் வாக்கு கொடுப்பதோ உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ கூடாது. உணவு விஷயங்களில் கவனமாக இருந்து வயிறு சம்பந்தமான பிரச்னைகளைத் தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் உத்தியோக விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் நடந்தேறும். குழந்தை இல்லாதோருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். அனைவரும் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும். மனதில் நெருடிக் கொண்டிருந்த பழைய தவறு ஒன்று இந்த காலகட்டத்தில் வெளியில் வரமுடியாத அளவுக்கு மறைந்துவிடும். மனதை ஒரு நிலைப்படுத்த தியானம், யோகா போன்றவற்றைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் அனைவருக்கும் அறிவுரை வழங்கும் தகுதியைப் பெறுவீர்கள். உங்களது அவநம்பிக்கைகள் அகன்று தன்னம்பிக்கை கூடத்தொடங்கும். பொருளாதாரத்தில் முன்னேற புதிய வழிகளைத் தேடுவீர்கள். குறிப்பாக, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். நெருங்கியவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு அலுவலக வேலைகளில் குளறுபடிகள் எதுவும் ஏற்படாது. ஊதியம் சரியாகவே வந்து கொண்டிருக்கும். புதிய முயற்சிகளில் யோசித்து இறங்கவும். பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் கோபப்பட்டு எவரிடமும் பேசவேண்டாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். புதிய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். சேமிப்புகள் கூடும். பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதிக வருமானம் வரும் வியாபாரத்திற்கு மாறுவார்கள். விவசாயிகள் இந்த ஆண்டு பெரிய மாற்றம் எதையும் பெற முடியாமல் போகும். விளைச்சலில் குறைவு இருக்காது. பழைய குத்தகைகளை முடித்துக் கொடுத்த பிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும். தேவைக்கேற்ப வருமானம் வந்து கொண்டிருந்தாலும் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். இலக்கை நிர்ணயித்துக் கொண்டு தங்கள் எண்ணங்களைச் செயல்படுத்தவும். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டில் யோகபாக்கியங்கள் கூடும். புதிய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பீர்கள். சக கலைஞர்களின் உதவிகளை சந்தேகக் கண்கொண்டு பார்க்காமல் புரிந்து பழகவும். இந்த ஆண்டு துறையில் புதிய அணுகுமுறைகளைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள் என்றால் மிகையாகாது. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் மதிப்பு அதிகரிக்கும். இருப்பினும் தாய்வழி உறவினரால் சிறு குழப்பங்கள் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டி வரும். மாணவமணிகள் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் படிப்பில் ஈடுபடுவீர்கள். உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டுவர சிரமங்கள் குறையும்.

***

கடகம்

(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் நீங்கள் சற்று கூடுதலாக முயற்சி செய்து இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். உங்களுக்கு இடையூறு செய்தவர்களை சமயம் பார்த்து ஒதுக்கி விடுவீர்கள். புதிய அசையும் சொத்துகளை வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் திருவிழா, விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளும் படிப்பில் சிறப்பாக வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். பழைய மன உளைச்சல்களிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். வீட்டிலும் வெளிலும் பெயர், அந்தஸ்து கூடும். திடீரென்று ஒரு புதிய மனிதரால் சிறப்பான நன்மை உண்டாகும். மந்தமாக நடந்து வந்த காரியங்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். ஆன்மிக தர்ம காரியங்களுக்கும் செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு வேறு ஊருக்குச் சென்று தொழில் புரியும் வாய்ப்புகளும் கிடைக்கும். சிலர் புதிய வீட்டிற்கு மாறுவார்கள். சிலர் இருக்கும் வீட்டிற்கு பராமரிப்புச் செலவுகள் செய்வீர்கள். உங்கள் செயல்களை குறுக்கு வழியில் செய்யாமல் நேர் வழியில் மட்டுமே செய்ய வேண்டிய காலகட்டமிது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் சுகசௌகரியங்கள் கூடும். அன்னை வழியில் நன்மைகள் கூடும். முரண்பாடாக நடந்து கொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாக மாறுவார்கள். கவலைகளை மறந்து சிறப்பாக பணியாற்றுவீர்கள். புதியவர்களை நம்பி எதையும் பேச வேண்டாம். மனதில் தெளிவு பிறக்கும். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லது நடக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நீங்கள் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கத் தொடங்கும். வேண்டா வெறுப்போடு பழகிக் கொண்டிருந்த ஓர் உறவினர் தானாகவே விலகி விடுவார். மறைமுக எதிர்ப்புகளும் விலகி ஓடும். புதிய தொழில் செய்ய வாய்ப்புகளும் தேடி வரும். தேவைக்கேற்ற வருமானம் கடைசி நேரத்திலாவது வந்து சேர்ந்து விடும். சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய யுக்திகளைப் புகுத்தும் எண்ணங்கள் தோன்றும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே இருக்கும். அதனால் அவர்கள் போடும் உத்தரவுகளை சரியாகப் புரிந்து கொண்டு செயலாற்றவும். பணவரவு நன்றாகவே இருக்கும். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சீரான நிலையையே காண்பார்கள். கூட்டாளிகள் செய்யும் மறைமுகத் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருக்கவும். எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்காலக் கனவுகளும் திட்டங்களும் பலிக்க ரகசியமாகத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். போட்டியாளர்களின் சதியையும் உடனுக்குடன் அறிந்து கொண்டு தக்க மாற்று முயற்சிகளையும் செய்வீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சக உழைப்பாளிகளை அரவணைத்துச் செல்லவும். குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கால்நடைகளால் சில செலவுகளும் உண்டாகும். எதிர்கால வளர்ச்சிக்குத் திட்டமிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் தங்களின் வேலைகளை சரிவரச் செய்து முடிப்பார்கள். அனாவசிய பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். அதனால் "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் செயல்படவும். உட்கட்சி பூசல்களைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி பெறுவர். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களாலும் பாராட்டப்படுவீர்கள். அவர்களின் மூலம் சில வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும், வெளிவட்டாரத்தில் பழகும்போது கவனமாக இருக்கவும். உடன்பிறந்தோர் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆதரவும் நன்றாக இருப்பதால் இடர்களைச் சமாளிப்பீர்கள். மாணவமணிகளுக்கு இது சாதகமான ஆண்டாகும். வருங்காலத்திற்காக செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். இந்த ஆண்டு நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டி கடுமையாக உழைப்பீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com