எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால், பரிசுத்தத்திற்கோ ஓர் எல்லை இல்லை. இன்னும் பரிசுத்தப்பட வேண்டுமே, இன்னும் சுத்திகரித்துக் கொள்ள வேண்டுமே என்ற வாஞ்சை, நம்மை பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமடையச் செய்கிறது.
எவ்வாறு பரிசுத்தமாக இருப்பது என்று பார்த்தால், பரிசுத்த வேதாகமத்தில், நீதிமொழிகள் 29:25-இல் மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் என்று சொல்லப்பட்டதற்கிணங்க, கர்த்தருக்குப் பயப்படுகிற பயமே, நம்மை பரிசுத்தமடையச் செய்கிறது.
தேவபயம் இல்லாதவர்களோ, துணிகரமாக பாவமான காரியங்களை நடப்பிப்பர். துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும், அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை என்று சங்கீதம் 36:1-இல் பார்க்கிறோம்.
எனவே நாம், துன்மார்க்கமான காரியங்களுக்கு விலகி, கர்த்தருக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது, தேவன் நமக்கு துணைநின்று காப்பார்.
யோசேப்பின் வாழ்க்கையைக் கவனித்துப் பாருங்கள். யோசேப்பு தன்னைப் பாதுகாத்துக் கொண்டதின் ரகசியம், அவருக்கு இருந்த தேவ பயம்தான். ஒருமுறை யோசேப்புக்கு, பாவ சோதனை ராஜாவின் மனைவி மூலமாக வந்தது. அவள் தவறான காரியத்துக்கு இணங்கும்படி இவனை வற்புறுத்தினாள். ஆனபோதும் கூட, அவன் அதை மனுஷருக்கு முன்பாக பாவமாக எண்ணாமல், தன்னைக் காண்கிற கர்த்தருக்கு முன்பாகக் கொடிய பாவமாகக் கண்டான். நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி (ஆதி. 39:9) என்றுகூறி அவளிடம் இணங்காமல் வெளியே ஓடினான். இதனால் யோசேப்பு தன்னிடம் தவறாக நடக்க முயன்றான் என்று தன் கணவனிடம் கூறினாள். இதனால் யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டான்.
கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான். அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான். கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணின படியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை. (ஆதி.39:21-23).
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், எந்த ராஜாவால் யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டானோ, அந்த ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் அமர்ந்து பணிபுரியக்கூடிய உயர்ந்தப் பதவியை தேவன் கொடுத்தார்.
ஆகவே, நாம் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள ஒருபோதும் பயப்படவேகூடாது. நாம் செய்யும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும், இது தேவனுக்குப் பிரியமானதா? இல்லையா? என்று ஒருமுறை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அது தேவனுக்கு பிரியமான செயலாக இருந்தால் மட்டுமே செய்யவேன்டும்.
நாம் தேவ பயத்தோடு, பரிசுத்தத்தைப் பாதுகாக்கத் தீர்மானிக்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே உதவிசெய்து, பாவ சோதனைகளிலிருந்து நம்மை விலக்கிக்காத்து உயர்த்துவார்.
- ஒய்.டேவிட் ராஜா