திருமகளின் ஆசை நிறைவேறிய திருத்தலம்!

அவசரத்தில் நாம் பல தவறுகளைச் செய்துவிடுகிறோம். மனைவியின் மனதைப் புண்படுத்திப் பேசுவதும், அவள் நோகும்வண்ணம் செய்யும் கர்மங்களும்
திருமகளின் ஆசை நிறைவேறிய திருத்தலம்!

சென்ற வார தொடர்ச்சி...
அவசரத்தில் நாம் பல தவறுகளைச் செய்துவிடுகிறோம். மனைவியின் மனதைப் புண்படுத்திப் பேசுவதும், அவள் நோகும்வண்ணம் செய்யும் கர்மங்களும் பெரிய பாவ தோஷத்தை உண்டாக்கும். வேடிக்கையாக சிலரைப் பற்றி பேசிச் சிரிப்பதும், அடுத்தவர் அறியாது அவரை ஏளனமாகப் பேசுவதும் எண்ணுதலும், எள்ளி நகையாடுதலும் பெரும் தோஷத்தை அள்ளித்தரும்.

"தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்' என்பது சான்றோர் வாக்கு. ஒருவன் செல்வந்தன் என்றால் அவன் முன்வினை சிறப்புடையது என்பதே பொருள். முன்சொன்ன தோஷங்கள் நம்மை துயரத்துக்குள்ளாக்கும். தாய்- தந்தையரை பேணா தோஷம், சகோதரரை வஞ்சித்த பாவம், வியாபாரத்தில் சொல்லும் பொய் இவை யாவும் வறுத்தும். பாவங்களை அறியாது செய்தால் அதற்கு விமோசனம் உண்டு. அறிந்து செய்யும் பாவங்களை சண்டாளம் என்கிறார் பாம்பாட்டியார். பின்னைப் பிறவியில் இவற்றிலிருந்து விடுபட்டு பிறப்பிலா பேரின்பம் பெறவும், இம்மையில் சுகபோகத்துடன் வாழவும் திருநின்றியூர் உலகநாயகி அம்மனை தொழவேண்டும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்து இறைவனை போற்றிப்பாடிய திருப்பதிகத்துள், நின்றியூர் பரமனை வழிபட்டுப் பேறுபெற்றோர் பலரை தெளிவாகக் கூறியுள்ளார். இத்தலத்து இறைவன், இந்திரன் வழிபாட்டை ஏற்று அவனுக்கு வானநாட்டையும், அகத்தியர் வழிபாட்டுக்கு மகிழ்ந்து அவருக்கு பொதிகை மலையில் இருக்கும் பேற்றையும், கதிரவன் எழுவதற்கு முன் பால்சொரிந்து வழிபட்ட பசுவுக்கு திருவடிப்பேற்றையும், ஐராவதத்தின் வழிபாட்டுக்கு மகிழ்ந்து அதற்கு விண்ணுலக வாழ்வையும் அருளினன் என குறித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு ஒரு வேலி நிலத்தின் வருவாயினால் வழிபாடுகள் செய்யவேண்டும் என்ற குறிக்கோளில், வேதமோத முந்நூறு அந்தணர்களுடன் 360 வேலி நிலம் அளித்து பரசுராமன் வழிபட, அவனுக்கு இத்தலத்து இறைவன் திருவருட் பேரளித்த சிறப்பினை "மொய்த்த சீர்..' என தொடங்கும் இத்தல தேவாரப் பாடலுள் குறிப்பிட்டுள்ளார்.

நாற்புறமும் அழகிய மதிலால் சூழப்பெற்று, கிழக்கே மூன்று நிலை ராஜகோபுர முடையதான தோரணத்திருவாயிலுடன் திகழ்கிறது ஆலயம். கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றாகத் திகழும் இத்தலத்தில், சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. பூமியைத் தோண்டியபோது சுவாமியின் தலையில் ஏற்பட்ட வடு இன்றும் உள்ளது. இத்தல இறைவன் சுயம்புலிங்கமாய் அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்திற்குக் கீழிருக்கும் முயலகன் கிழக்கு மேற்காக தலையை வைத்து, இடப்புறமாகத் திரும்பி கையில் நாகத்துடன் இருக்கும் அமைப்பு அபூர்வமானது. கல்வியில் தேற, நினைத்தபடி தொழில் அமைய, தொழிலில் முன்னேற்றம் பெற, பெருந்தனம் தேட, தேடிய தனத்தை சேமித்து சுபவழியில் விரயமின்றி செலவு செய்ய நம்மை நல்வழிப்படுத்தி முன்னேற அடிகோலும் தெய்வம் இந்த தட்சிணாமூர்த்தி. அது மட்டுமின்றி சர்ப்பதோஷம், நாகதோஷம், பித்ரு தோஷம், குரு சாபம், மூதாதையர் சாபம் போன்றவற்றால் வாடும் மக்களுக்கு இந்த தட்சிணாமூர்த்தி அருமருந்தாகத் திகழ்வதாக கூறுகிறார் கொங்கணசித்தர்.

லிங்கோத்பவர் உள்ள இடத்தில் மகாவிஷ்ணு சிலை உள்ளது. அதனால் முக்தி தலங்களில் ஒன்றாகவும் மும்மூர்த்தி தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சந்நிதிகள் காணப்படுகின்றன. ஈசான்ய திக்கில் தீர்த்தக்கிணறு உள்ளது. மேலும் சூரியன், பைரவர் மேற்கு நோக்கி அருள்புரிகின்றனர். நவக்கிரகங்களில் உள்ள சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்த்தபடி வேறெங்கும் இல்லாத வித்தியாசமான அமைப்பாகும். அமாவாசை நாள்களில் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக இங்கு சிறப்பு பூஜை செய்வது நல்லது.

இக்கோயிலைச் சுற்றி மூன்று குளங்கள் இருப்பது விசேஷம் (மகாலக்ஷ்மி தீர்த்தம், யம தீர்த்தம், நீல தீர்த்தம்). இத்தலத் தீர்த்தத்தை நீலமலர்ப் பொய்கை என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜதேவன், கோச்செங்கட்சோழன் கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

நின்றியூர் "பரமனைப் பற்றினாரை வினைப்பாவம் பற்றா' என்றும், "வினை ஓயும்' என்றும் திருநாவுக்கரசர் தனது பதிகத்திலும்; "கங்கையை முடியிற்சூடிய நின்றியூர் நிமலனை வழிபடுவோர் அச்சம், பாவம், கேடு, நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர்' என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்திலும்; "திருமகள் வாழும் செல்வ வளத்தையுடைய திருநின்றியூர் ஈசனை வணங்குவோர் வினை நீங்கி இறைவனின் திருவடிப் பேற்றினை எய்துவர்' என்று சுந்தரர் தனது பதிகத்திலும் இத்தல ஈசனைப் போற்றியுள்ளனர்.

மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் செல்லும் கற்பாதையில் 10 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் உள்ளது.
தொடர்புக்கு: கே. சுப்ரமணிய சிவாச்சார்யார் - 94426 96327.
- அறந்தாங்கி சங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com