உருத்திரபசுபதி நாயனார் குருபூஜை!

பாடல் விளக்கம்: அரிய மறைப் பொருளாய உருத்திர மந்திரத்தைக் கொண்டு, திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராச் சேவ டியை போற்றிடும்
உருத்திரபசுபதி நாயனார் குருபூஜை!

"ஆய அந்தனணர் அருமறை உருத்திரம் கொண்டு 
 மாயனார் அறியா மலர்ச்சேவடி வழுத்தும்
 தூய அன்போடு தொடர்பினில் இடையாறச் சுருதி
 நேய நெஞ்சினராகி அத்தொழில் நின்றார்'
பாடல் விளக்கம்: அரிய மறைப் பொருளாய உருத்திர மந்திரத்தைக் கொண்டு, திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராச் சேவ டியை போற்றிடும் தூயதான அன்புடன் இடையறாது அவ்வுருத்திர மந்திரத்தை எண்ணுதலையே விரும்பிய நெஞ்சினராகி, அதனையே ஓதுகின்ற பணியில் தலை நின்றார். 

சோழவள நாட்டில் திருத்தலையூர் என்னும் ஊர் அமைந்திருந்தது. இவ்வூரில் எந்நேரமும் அந்தணர்களின் வேதபாராயணம் வானெட்ட ஒலித்த வண்ணமாகவே இருக்கும். இவர்கள் வளர்க்கும் வேள்வித் தீயின் பயனாய் மாதம் மும்மாரி பெய்யும் அளவிற்கு அருளுடைமையும், பொருளுடைமையும் ஓங்கிட  அன்பும் அறனும் சால்பும் குன்றாது குறையாது நிலைபெற்று விளங்கின. இத்தகைய சீரும், சிறப்புமிக்கத் திருத்தலையூரில் பசுபதியார் என்னும் ஓர் அந்தணர் இருந்தார்.

இவர்தமது மரபிற்கு ஏற்ப வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.  பசுபதியார் அருமறைப் பயனாகிய திருஉத்திரம் என்னும் திருமந்திரத்தை இடையறாமல் பக்தியுடனும், அன்புடனும் சொல்லிக் கொண்டேயிருப்பார். 

திரு அல்லது ஸ்ரீ என்பது திருமகனாகிய செல்வம், அழகு ஆகிய பொருள்களில் சொல்லப்படுவதால் எம்பெருமான் ஸ்ரீருத்திரன் அல்லது திருவுருத்தன் என்னும் திருநாமம் பெற்றார். ருத் என்றால் துன்பம் என்றும் திரன் என்றால் தீர்ப்பவன் என்றும் பொருள் கொள்ளப்படுவதால் எம்பெருமான் ருத்திரன் என்னும் திருநாமம் பெற்றார். உருத்திரராகிய சிவபெருமானுக்குரிய திருமந்திரம் உருத்திரமாகும். சிவபெருமானுக்கு உருத்திரம் கண்ணாகவும், பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்கின.

எம்பெருமானுடைய பெருமையைச் சொல்லும் இம்மந்திரமே வேதத்தின் மெய்ப்பொருளாகும் அருமறைப் பயனாகிய உருத்திரம் என்று சேக்கிழார் சுவாமிகள் பாராட்டியுள்ளார்.  இத்திருமந்திரத்தையே தமது மூச்சாகவும், பேச்சாகவும் கொண்டு ஒழுகி வந்தார் பசுபதியார். 

இவர் தினந்தோறும் தாமரைப் பொய்கையில் நீராடி கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தலைக்கு மேல் கரங்கள் குவித்து உருத்திர மந்திரத்தை ஓதுவார். இரவென்றும் பகலென்றும் பாராமல் எந்நேரமும் உருத்திரத்தைப் பாராயணம் செய்வதிலே தம் பொழுதெல்லாம் கழித்தார். இது காரணம் பற்றியே இவருக்கு உருத்திய பசுபதியார் என்றும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. 

உருத்திர பசுபதியின் பக்தியைப் பற்றி ஊரிலுள்ள அனைவரும் புகழ்ந்து பேசிய வண்ணம் இருப்பர். உருத்திர பசுபதியாரின் பக்தியின் பெருமை எம்பெருமானின் திருவுள்ளத்தை மகிழச் செய்தது; எம்பெருமான், பசுபதியாருக்குப் பேரருள் புரிந்தார். உருத்திரபசுபதி நாயனார் இறைவனுடைய திருவடி பெற்றார். இந்நாயனாரின் குரு பூஜை தினம்: 7-10-2017 (அசுவதி நட்சத்திரம்) 
-  பொ.ஜெயச்சந்திரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com