* நல்லவர்கள் தர்மத்திலிருந்து தவறமாட்டார்கள், கவலைப்படமாட்டார்கள், அழியமாட்டார்கள். நல்லவர்களின் தொடர்பு ஒருபோதும் வீணாகாது. நல்லவர்களிடம் பயம் கிடையாது. நல்லவர்கள் சத்தியத்தால் சூரியனை இயக்குகிறார்கள்; பூமியை நிலைத்து நிற்க வைக்கிறார்கள். நல்லவர்கள் இடையே நல்லவர்கள் கஷ்டப்படுவதில்லை; இது பெரியோர்கள் சொல்லும் சாசுவதமான நெறியாகும்.
- மகாபாரதம்
* நீண்ட காலம் இடைவிடாமல் ஏற்பட்ட ஆன்மிக சாதனைகளுடன் தொடர்ந்து பயிற்சி (அப்பியாசம்) நிகழுமானால், அது உறுதியாகி விரும்பிய பலனைத் தரும்.
- யோக சூத்திரம்
* பக்தன் உலகியல் இழப்பைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவன் தன்னையும், தன்னுடைய எல்லாச் செயல்களையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டான். ஆனால் பக்தியில் சித்தி (பூரணத்துவம்) ஏற்படாத வரையில், உலக விவகாரங்களைத் துறந்துவிடக் கூடாது; கர்மாக்களின் பயனைத் துறந்து (நிஷ்காம உணர்வுடன்) பூரண பக்திக்கான ஆன்மிக சாதனைகளைச் செய்ய வேண்டும்.
* பக்தி என்பது இறைவனிடம் ஏற்படும் உன்னதமான பிரேமை வடிவமாகும்.
- நாரத பக்திசூத்திரம்
* யாசகம் கேட்பவன், சரணாகதியடைந்தவன் ஆகியவர்களின் விருப்பத்துக்கு பங்கம் ஏற்படாமல் நடந்துகொள்பவனே, இந்த உலகில் உள்ள மனிதர்களில் சிறந்தவன். அவனே சத்புருஷர்களின் விரதத்தை நிறைவேற்றி வைத்தவன்.
- பஞ்சதந்திரம்
* உடலைப் பாதுகாப்பதில் அளவுக்கும் மீறி பற்றுடைய ஒருவன் ஆத்மாவைக் காண ஆசைப்படுவது, முதலையைத் தெப்பக்கட்டை என்ற புத்தியால் பிடித்துக்கொண்டு ஆற்றைக் கடப்பதற்குச் சமமாகும்.
* வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும், பாவமற்றவரும், ஆசை வழியில் அழியாதவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், பிரம்மஞானிகளில் சிறந்தவரும், விறகில்லாத நெருப்புப்போல் அமைதியாக இருப்பவரும், கடல்போல் கருணையுள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ, அவரே சிறந்த குரு ஆவார்.
- விவேகசூடாமணி