பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

ஓ மூடனே, இந்த உடல் முதிர்ச்சியடைந்து இளைத்து, பூட்டுக்கள் தளர்ந்துபோய் நிச்சயமாக அழிந்துவிடப் போகிறது.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• ஓ மனமே, ஸ்ரீ கிருஷ்ணன் என்ற மருந்தை நீ பருக வேண்டும். அந்த மருந்து உலக மயக்கங்களைத் தெளிவிக்கக் கூடியது; முனிவர்களின் மனதை ஆண்டவனிடமே திருப்புவது; அரக்கர்களுக்குக் கஷ்டம் தருவது; மூவுலக மக்களையும் புத்துயிர் பெற வைப்பது; பக்தர்களுக்கு நன்மை செய்வது; பிறப்பு என்ற சம்சார துக்கத்தை நீக்குவது; பலவித நன்மைகளையும் அளிப்பது.

• பகவானுடைய திருவடிகளை நினைக்காமல் -  வேதங்களைக் கற்பது காட்டில் புலம்புவதற்கு ஒப்பாகும்; வைதீக விரதங்கள் உடலில் உள்ள நல்ல கொழுப்பை அகற்றுவது என்ற பலனையும் அடைவனவாகும்; கிணறு, குளம் வெட்டுவது போன்ற தர்ம காரியங்கள் சாம்பலில் செய்த ஹோமம் போல் பயனற்றதாகும்; கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது யானையைக் குளிப்பாட்டியதற்கு ஒப்பாகும். அந்த பகவான் வெற்றி கொள்வாராக.    

• ஓ மூடனே, இந்த உடல் முதிர்ச்சியடைந்து இளைத்து, பூட்டுக்கள் தளர்ந்துபோய் நிச்சயமாக அழிந்துவிடப் போகிறது. ஆகவே இந்த உடலைக் காப்பாற்றுவதற்காகப் பற்பல மருந்துகளை நீ அருந்த வேண்டியதில்லை. ஸ்ரீ கிருஷ்ணன் என்னும் நாமத்தை உச்சரிப்பதாகிய மிகவும் உயர்ந்த மருந்தை அருந்து.

• ஹரி என்பது ஒரு தடாகம். இந்தத் தடாகத்தில் பகவானுடைய கை, கால்களே தாமரை மலர்கள்; அவரது கண்களே மீன்கள்; அவரது புயங்களே அசையும் அலைகள்; பிறப்பு இறப்பு என்னும் சம்சாரமாகிய பாலைவனத்தில் சுற்றி அலைந்த நான், இந்தத் தடாகத்தில் மூழ்கி, இறைவனது திருமேனி ஒளியாகிய தண்ணீரைப் பருகி, எனது தாகத்தை அகற்றிக்கொள்கிறேன்.
 - ஸ்ரீ முகுந்தமாலா

• பகவானே, நீங்கள் சக்தி வடிவமானவர்; எனக்குச் சக்தியை அளியுங்கள்.

• நீங்கள் வீரிய வடிவமானவர்; எனக்கு வீரியத்தை அளியுங்கள்.

• நீங்கள் பலத்தின் வடிவமானவர்; எனக்கு பலத்தை அளியுங்கள்.

• நீங்கள் ஆற்றல் வடிவமானவர்; எனக்கு ஆற்றலை அளியுங்கள்.

• நீங்கள் தீர வடிவமானவர்; எனக்கு தீரத்தை அளியுங்கள்.

• நீங்கள் பொறுமை வடிவமானவர்; எனக்குப் பொறுமை அளியுங்கள்.
 - சுக்ல யஜுர் வேதம் 

* வீரம் பேசுவது எல்லோருக்குமே எளிதுதான். ஆனால் பேசுவது போன்று செயல்படுவதுதான் கஷ்டம்.    

* தங்கள் ஆற்றலின் அளவை உணர்ந்து, அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நிச்சயமாக வெற்றியைத்தான் அடைவார்கள்.     
- பஞ்சதந்திரம்

* நாம் நூறு வயது வரை இந்த உலகில் வாழ்ந்து பணத்தைச் சேர்த்தாலும், நம் உயிர் இந்த உடலைவிட்டுப் போகும்போது ஒரு பைசா கூட எடுத்துக்கொண்டு போக முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். பெண்களோ, ஆண்களோ அணிந்துகொண்டிருக்கும் ஆபரணங்கள் நெருப்பு இந்த உடலைத் தீண்டுவதற்கு முன்னரே கழற்றப்பட்டு விடுகின்றன! உயர்ந்தரகப் பட்டுப்புடவை, வேட்டி முதலியனவும் வீட்டிலேயே அவிழ்க்கப்படுகின்றன. ஆகையால், நாம் சம்பாதிப்பதை நாமே எடுத்துப் போவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தை வேறு சாமான்களாக மாற்றிவிட்டால், உயிர் உடலை விட்டுப்போகும்போது நம்முடன் கூடவே கொண்டு போகலாம். வேறு சாமான்கள் என்றால் என்ன? பணத்தைச் செலவழித்துப் பலவகையான புண்ணியங்களை மூட்டை கட்டி வைத்துக்கொண்டால், அந்தப் புண்ணிய மூட்டைகளை நம்முடன் கூடவே கொண்டு செல்லலாம்!    

* ஒருவன் சிறந்த கல்விமானாக இருக்கலாம். உயர்குடியில் பிறந்தவனாக இருக்கலாம். ஏராளமான சொத்துக்கு அதிபதியாகவும் இருக்கலாம். இவை யாவும் ஒரு மனிதனுக்கு உலகில் பெருமை தரும் விஷயமாகத் தோன்றினாலும், அவன் இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை இல்லாதவனாக இருப்பானேயானால், அவன் பெற்றுள்ள அத்தனைச் சிறப்புகளும், மரியாதையும், லட்சியமும் ஒரு நாள் இல்லாமல் போய்விடும். அதேபோன்று ஒருவன் ஈசுவர பக்தியில் மூழ்கித் திளைப்பவனாக இருப்பானேயானால்  அவன் தன்னைக் கடவுளின் சேவகன் என்ற அடக்க உணர்வுடன் தன்னுடைய கடமைகளைச் செய்து வருவானாயின்  உலகம் எண்ணுகிறபடி அவனுக்குப் பகுத்தறிவு இல்லாவிட்டாலும், அவன் நோயாளியாகவோ அல்லது அவலட்சணமாகவோ இருப்பானாயின்  அவன் தாழ்ந்த குடியில் பிறந்தவனாயிருப்பினும், எந்த நிலையிலும் உண்மையான மதிப்பிற்கும், மரியாதைக்கும், வழிபாட்டிற்கும் உரியவனாகவே இருப்பான்!
 - ஸ்ரீ வைஷ்ணவம்

* "யான்'  "எனது' என்னும் இரண்டு சொற்களையும் விட்டு மானம், அவமானம் அற்றவர்களாய்; சமநோக்கு உடையவர்களாய்; செய்பவன் இறைவன் என்று உணர்ந்து தர்மத்தின் பலன்களை இறைவனிடம் பெரியோர்கள் ஒப்படைக்கிறார்கள். 
 - தன்யாஷ்டகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com