சகல பாக்கியங்கள் அருளும் சப்தகன்னியர் வழிபாடு!

ஆதிபராசக்தியை நோக்கி, பெருங்கடல் போல் ஆர்ப்பரித்து வரும் அசுரப்படைகளைக் கண்ட பராசக்தி, அவர்களை சம்ஹாரம் செய்ய ஆவேசம் கொண்டாள்.
சகல பாக்கியங்கள் அருளும் சப்தகன்னியர் வழிபாடு!

ஆதிபராசக்தியை நோக்கி, பெருங்கடல் போல் ஆர்ப்பரித்து வரும் அசுரப்படைகளைக் கண்ட பராசக்தி, அவர்களை சம்ஹாரம் செய்ய ஆவேசம் கொண்டாள். அப்போது தேவியின் அம்சமாக ஏழு கன்னியர் தேவியின் உடலிலிருந்து தோன்றினார்கள் என்கிறது தேவி மஹாத்மியம்!

அன்னவாகனத்தில் அமர்ந்து மேலிரு கரங்களில் ருத்ராட்ச மாலையும் கமண்டலமும் ஏந்தியவளாகத் தோன்றினாள் பிரம்ம சக்தியான "பிராம்மி!' நான்கு முகங்கள் கொண்ட இத்தேவி, மஞ்சள் ஆடை அணிந்து கைகளில் திரிசூலம் ஏந்தி, நாகங்களை தோள்வளையாக அணிந்தவள். கீழ்க்கரங்கள் அபயவரதமும் காட்டும். இத்தேவியை வழிபட்டால் கலைகளில் சிறந்து விளங்குவதுடன் ஞானம் பெருகும். சரும நோய்கள் இருந்தால் குணமாகும். மகேசனின் சக்தியாக உருவெடுத்தவள் "மகேஸ்வரி!' நான்கு கரங்களுடன் திரிசூலம் ஏந்தி, அபயவரதம் காட்டி அருள்பவள். சந்திர கலை அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில் காட்சி தரும் இத்தேவியை வழிபட சர்வமங்களங்கள் யாவும் கைகூடும். 

முருகனின்அம்சமாக அவதரித்தவள் "கௌமாரி!' நான்கு கரங்களில் மேலிரு கரங்களில் சக்திஆயுதமும் வஜ்ராயுதமும் தாங்கியவள். கீழ் இரு கரங்களில் அபய, வரதமும் தலையில் ஜடாமகுடமும் தரித்திருக்கும் இவள் நீல நிறத்தினள். வாகனம் மயில்!இத்தேவியை வழிபட, எதிலும் வெற்றி உண்டு. ரத்தம் தொடர்பான நோய்கள் குணமாகும்.

விஷ்ணுவின் சக்தியானவள் " வைஷ்ணவி!' மேலிரு கரங்கள் சங்கு, சக்கரமும் கீழிரு கரங்கள் அபய, வரதம் காட்டி காட்சி அருள்கிறாள். கருட வாகனத்தைக் கொண்ட இத்தேவியை வழிபட, நலமும் வளமும் பெற்று சுகமுடன் வாழலாம். விஷ ஜந்துக்களின் தொல்லை இராது. 

திருமாலின் வராஹ வடிவம் ஏற்றவள் "வராஹி!' மேக நிறத்தினளான இவள், வராகத்தின் முகத்தோற்றம் பெற்றவள். பின்னிரு கரங்களில் உடுக்கை, கலப்பை ஏந்தி, அபய வரதம் காட்டி அருள்பவள். லலிதாம்பிகையின் படைத்தலைவி. சிம்மவாஹினியான இவளை வழிபடுவதால் எடுத்த காரியங்கள் தடைகள் இன்றி வெற்றி பெறும். 

இந்திரனின் சக்தி அம்சமாக தோன்றியவள் "இந்திராணி!' ரத்ன மகுடம் தரித்து வெள்ளை யானையில் வீற்றிருப்பாள். நான்கு கரங்களில் சக்தியாயுதம், வஜ்ராயுதம் தாங்கி அபய வரதம் அருள்பவள். பொன்நிற மேனிகொண்ட இவளை வழிபடுவதால் எதிரிகள் அழிவர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

சண்டன், முண்டன் எனும் அசுரர்களை அழிக்க சக்தியின் வடிவாகத் தோன்றியவள் "சாமுண்டி!' கருமையான நிறமும், முக்கண்களும் கொண்டவள். கத்தி, சூலம், கபாலம் ஏந்தி அபய முத்திரை காட்டும் இத்தேவி புலித்தோல் ஆடை அணிந்திருப்பாள். இவளை வழிபடுவதால் வாழ்வில் துன்பங்களைச் சந்திக்கமாட்டார்கள். தீவினைகள் அழியும்.

இந்தச் சப்தகன்னியர்களை திருத்தணி, தக்கோலம், திருவையாறு, திருப்பைஞ்ஞீலி, திருக்கோகர்ணம் மற்றும் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் தரிசிக்கலாம்.
- டி.ஆர். பரிமளரங்கன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com