திருவரங்கத்தமுதனார்! 

காஞ்சியிலிருந்து ஆளவந்தாருக்கு பிறகு ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்து கோயிலின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்
திருவரங்கத்தமுதனார்! 

காஞ்சியிலிருந்து ஆளவந்தாருக்கு பிறகு ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்து கோயிலின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கோயில் நடைமுறையில் பல நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தினார். ராமானுஜரின் செய்கைகளால் தங்கள், நிர்வாக உரிமையில் அவர் குறுக்கிடுவதாகக் கருதினர். பலர் ராமானுஜருக்கு பல வகைகளில் இடையூறு செய்தனர்.
கோயிலின் நடைமுறைகளில் பலகாலமாய் பழகியிருந்த பெரிய கோயில் நம்பி தடையாக இருப்பதாக பலர் ராமானுஜரிடம் வாதிட்டனர். அவரை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திலிருந்து வெளியேற்றாவிட்டால், ராமானுஜரின் எண்ணம் ஈடேறாது என்றனர். அவரும் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வாகம் செய்து வந்த கோவில் பிள்ளையை வெளியேற்ற நினைத்தார்.
ராமானுஜர் ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காக காத்திருக்கும் போது, மண்டபத்திலேயே சற்றே கண் சாய்த்தார் . அரைகுறை தூக்கத்தில், பெருமாள் ஸ்ரீவைணவராய் தோன்றி "கோயில் நம்பி நீண்ட காலமாக என்னையே நம்பி என்னுடன் இருக்கிறார். அவரை வெளியேற்ற வேண்டாம்' என்று சொல்லி மறைந்தார்.
கூரத்தாழ்வானிடம் இதுபற்றி தெரிவித்தார் ராமானுஜர். கூரத்தாழ்வான், பெரிய கோயில் நம்பியிடம் மெள்ள நட்புக் கொண்டு, உடையவரின் பெருமை பண்புகளைச் சொல்லவும் கோயில் நம்பிக்கு உடையவர் மீது பிடிப்பு உண்டாகி, பக்தியாக மாறியது.
ஒருநாள், ராமானுஜர் அவரது இலக்கிய அறிவையும், வாக்கு வன்மையையும் பாராட்டி "அமுதன்' என்ற திருநாமத்தைச் சூட்டினார். அதனால் திருவரங்கத்தமுதனார் என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினர். ராமானுஜர் மீது கொண்ட பற்றால் கூரத்தாழ்வானின் அறிவுரைப்படி "ராமானுஜ நூற்றந்தாதி'யை புதியதாக அமுதனார் எழுதினார்.
பெருமாள் உலாவில் உடன் செல்லும் பழக்கம் உடையவருக்கு உண்டு. சித்திரை மாதம் 11 ஆம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி இன்று தாள வாத்தியங்கள் கூட வர வேண்டாம் என்று சொல்லி விட்டார். அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவித்ததை, பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார். ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒருவராக ஆக்கிக் கொள்கிறார் எனப்படுகிறது. இன்றும் திருவரங்கம் கோயில் ரங்கநாதர் சந்நிதியில் இயற்பா சாற்றி முடித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப் படுகிறது.
திருவரங்கத்தமுதனார் ராமானுஜரைக் காட்டிலும் மூத்தவர் என்ற குறிப்புக் கிடைக்கிறது. மேலும் 108 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. திருவரங்கத்தில் மட்டும் ஸ்ரீ சுதர்சனர் சந்நிதியில் இந்த ராமானுஜதாசர், சிலா உருவில் இருக்கிறார்.
- இரா.இரகுநாதன்




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com