கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! 

சைவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றானதான ஆகாய ஸ்தலம் சிதம்பரம்.
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! 

சைவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றானதான ஆகாய ஸ்தலம் சிதம்பரம். இதற்கு வடமேற்கு திசையில் குருவைய்யர் அக்ரஹாரத்தில் ஸ்ரீமத் ஜடாவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
 முன்பொரு காலத்தில் ஆந்திர தேசத்தில் குறுநில மன்னன் ஒருவன் அந்த தேச வட பகுதியை ஆண்டு வந்தான், மன்னனுக்கு மகப்பேறு இல்லாத காரணத்தால் பல யாகங்கள், தர்மங்கள் செய்து ஒரு பெண் மகளை பெற்றான், அந்ந பெண் குழந்தையை கல்வி, சாஸ்திரங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று விளங்குபவராக வளர்த்தான். அந்த பெண்ணும் தனது கல்வி அறிவுக்கு நிகரான மணமகனைதான் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்தாள். அவள் கூறியபடி மணமகன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர தேச தென் பகுதியைச் சேர்ந்த கல்வி அறிவு இல்லாத இளவரசன், அப்பெண்ணை திருமணம் செய்ய கொள்ள எண்ணி அப்பெண்ணின் நிபந்தனைபடி தனக்கு சாஸ்திரங்கள், காவியங்கள், காப்பியங்கள் தெரியும் என பொய்யாகக் கூறி திருமணம் செய்து கொண்டான். தனது கணவன் இளவரசனுக்கு கல்வி அறிவே கிடையாது என்பதை அறிந்த அப்பெண் அவனை விட்டு பிரிந்து விட்டாள்.
 தன் தவறை உணர்ந்த இளவரசன், தன் மனைவிக்கு நிகராக கல்வி கற்க எண்ணி பல தேசங்களுக்கு சென்றும் பலனில்லை. இந்நிலையில் மிகவும் வேதனைப்பட்டு தென் திசை நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது மிகவும் களைப்புற்று ஒரு மரத்தடியில் உறங்கினான். அப்போது அவனது கனவில் விநாயகர் உருவம் தோன்றி, சிதம்பரத்திற்கு செல்லுமாறு அசரீரி வாக்காக அவனிடம் தெரிவித்தது. சிதம்பரத்திற்கு வந்த இளவரசன் நகரின் வடமேற்கு பகுதியில் ஓர் ஒளி வட்டம் தெரிவதை கண்டு ஸ்ரீ ஜடா விநாயகரை மூர்த்தியாகவும், அதன் அருகில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான். முனிவர் கண் விழித்து பார்த்த போது, இளவரசன் தன் வரலாற்றை பணிவோடு கைகூப்பி தெரிவித்தான். பின்னர் முனிவர் அவனிடம் நீ இன்றிலிருந்து 48 நாள்களுக்கு மனதை ஒருநிலைபடுத்தி தினமும் சிறந்த பக்தியுடன் அருகே உள்ள பாசிமறுத்தன் ஓடையிலிருந்து ஒரு குடம் நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து, ஒரு செம்பருத்தி பூவாக சாற்றி பூஜை செய்ய வேண்டும். இந்த விநாயகர் ஜடாமுடியுடன் எழுந்தருளியிருப்பதால், தாயுள்ளம் கொண்ட அவர் உனக்கு நிச்சயம் அருள்பாலிப்பார் எனக் கூறினார்.
 ஜடாதர முனிவர் கூறியபடி தினமும் பக்தியுடனுடன், மிகுந்த ஆசாரத்துடன் ஆற்றிலிருந்து ஒரு குடம் நீரும், செம்பருத்தி பூவும் எடுத்து வந்து பூஜை செய்து வந்தான். இளவரசனின் பக்தியையும், சிரத்தையையும் சோதிக்க விநாயகர் முடிவு செய்தார். 48-ஆவது நாளன்று காலை வழக்கம் போல இளவரசன் குளித்து பக்தியோடு குடத்தில் நீர் எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்துவிட்டு செம்பருத்தி புஷ்பத்தை தேடும் போது, ஒரு புஷ்பம் கூட கிடைக்கவில்லை. கடைசியில் மனம் நொந்து விநாயகரை கண்ணீர் மல்க நோக்கினான். திடீரென வந்த யோசனையின்படி விளக்கு ஏற்றும் பஞ்சை எடுத்து, வட்டமாக வைத்து, தனது வலது கையை கல்லால் கீறி ரத்தத்தை வரவைத்து, அந்த ரத்தத்தை அதில் தேய்த்து செம்பருத்தி புஷ்பம் போல ஆக்கி விநாயகருக்கு பூஜைக்கு வைக்க முற்படும் போது விநாயகரே தன் கரத்தால் அவனை தடுத்து ஆட்கொண்டு காட்சியளித்தார்.
 பின்னர் பல காலம் கற்றாலும் கிடைக்காத கல்வி அறிவு பெற்றவனாக அவனை மாற்றி அருள்பாலித்து ஆசி வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இளவசரன், முனிவரையும் வணங்கி விடைபெற்று தன் தேசம் சென்று ஜடா விநாயகரால் அருள் பெற்றதை தெரிவித்து, தனது மனைவியுடன் மகிழ்ச்சியும் வாழ்ந்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. திருமணமாகாதவர்கள் வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்தால் திருமணம் ஆகும் என்பது இக்கோயிலின் ஐதீமாகும். சிறப்பு வாய்ந்த சிதம்பரம் குருவைய்யயர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜடா விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு வருகிற ஏப்ரல் 22- ஆம் தேதி (22-4-2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 90036 03192.
 - ஜி. சுந்தரராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com