* ஆத்மாதான் இந்த அழியும் உடலில் ஜீவனைப் புகுத்தி இயங்க வைத்திருக்கிறது. ஜடமான இந்த உடலில் உணர்வையும், அறிவையும் வைத்திருக்கிறது. இந்த அவலட்சணமான மேனிக்கு மினுக்கும், வனப்பும் ஊட்டுவதும் அதுவே. ஆத்மாவின் இயக்கத்தாலும் உதயத்தாலுமே ஜீவராசிகளின் வாழ்க்கை மலர்கிறது; இயங்கி வருகிறது.
- ரிக் வேதம்
* பாலில் வெண்ணெய் மறைந்திருப்பது போன்று ஆத்மா உயிர்களில் வசித்திருக்கிறது. அது மனம் என்னும் மத்தால் கடையப்பட வேண்டும்.
- அம்ருத பிந்தூபநிஷதம்
* காரணத்துக்கு அன்னியமாய்க் காரியமில்லை. உதாரணம்: மண்ணினால் உண்டாக்கப் பெற்ற பானை முதலிய பண்டங்கள், மண்ணுக்கு அந்நியமாக எப்படிக் காணவில்லையோ, நூலினால் நெய்யப் பெற்ற புடவைகள் நூலுக்கு அந்நியமாக எப்படிக் காணவில்லையோ, தங்கத்தால் செய்த ஆபரணங்கள் தங்கத்துக்கு அந்நியமாக எப்படிக் காணவில்லையோ, இரும்பினால் செய்த ஆயுதங்கள் இரும்புக்கு அந்நியமாக எப்படிக் காணவில்லையோ, அதுபோன்று பிரம்மத்தால் உண்டாக்கப் பெற்ற பிரபஞ்சங்கள், பிரம்மத்தைத் தவிர வேறில்லை என்று அறிவது.
- வாசுதேவ மனனம்
* நீண்ட காலம் உட்கார்ந்திருந்தாலும், நீண்ட காலம் அலைந்து திரிந்தாலும் மனிதனின் ஆயுள் குறைந்து கொண்டேயிருக்கிறது. அதனால் நேரத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
- ராமாயணம்