நகரின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் நாகர் திருக்கோயிலை வைத்தே கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு அப்பெர் வந்தது. நாகராஜருக்கென்று தனிக்கோயில் இங்கு மட்டும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. களக்காடு பகுதியை ஆட்சி செய்த அரசர் மார்தாண்டவர்மா தனக்கு ஏற்பட்ட சரும நோயை போக்குமாறு இங்கு வந்து வழிபட்டுள்ளார். பூரண குணம் அடைந்த மகிழ்ச்சியில் ஆலயம் அமைத்தார். ஆனால் கருவறையில் மட்டும் நாகர்கள் வருவதற்கு ஏற்றவாறு தென்னை ஓலைக்கூரை வேயப்பட்டது.
இங்கு, மூலவர் நாகராஜர் இருக்கும் இடம் முற்காலத்தில் நீர் சூழ்ந்த வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். அது இன்றும் காணக்கூடிய அதிசய நிகழ்வாகும். இந்த நீருடன் சேர்ந்த மணலே இங்கு பிரசாதமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மண்ணானது எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கிறது. இந்த மண்ணின் நிறம் ஆறு மாதம் கறுப்பு நிறமாகவும் ஆறு மாதம் வெள்ளை நிறமாகவும் இருப்பது அதிசயமான ஒன்றாகும்.
நாகதோஷம் உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரம் அன்று, இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் நீங்கும்.
- நாஞ்சில் சு. நாகராஜன்