யோகங்கள்

மூன்றாம் பாவம் அதிர்ஷ்டத்திற்கு முதலாவதாக உதவி செய்யும் ராசியாகும். இது உபஜய ஸ்தானங்களின் முதன்மையாகும்.

விக்ரம யோகம்: மூன்றாம் பாவம் அதிர்ஷ்டத்திற்கு முதலாவதாக உதவி செய்யும் ராசியாகும். இது உபஜய ஸ்தானங்களின் முதன்மையாகும். இதில் அசுபக்கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, தேய்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் இருப்பது நலம். இந்த ராசியில் மேற்கூறிய கிரகங்கள் பலவீனமடையாமல் அதாவது அந்த கிரகங்கள் நீச்சம் பகை இல்லாமல் இருந்தும் அவைகள் ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம், நட்பு பெற்று அமர்ந்திருந்தால் அதற்கு விக்ரம யோகம் என்று பெயர். இவர்கள் பலவிதங்களில் சாதனைகள் செய்வார்கள். படிப்புக்கு அப்பாற்பட்டு முன்னேறுவார்கள். சிலர் படிப்பு குறைவாக இருந்தாலும் ஏதேனும் ஒரு நுட்பத்துடன் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் பிரபலமடைவார்கள்.
 ஜலதி யோகம்: ஒருவரது ஜாதகத்தில் லக்னம் சுபக்கிரகங்களின் பார்வையை பெற்றும் லக்னாதிபதி நல்ல இடத்தில் அமரப் பெற்று முழுமையான பலமுள்ளவராகவும் இருப்பதோடு, நான்காம் வீடு உச்சம் அல்லது ஆட்சி வீடாக ஆவதாகவும் இருந்தால் இது ஜலதி யோகமாகும். இதனால் ஏராளமான கால்நடைகள் கிடைக்கும். விவசாயத்தால் நல்ல லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் பெருத்த ஆதரவு கிடைக்கும். நல்ல சிறப்பான குடும்பம் அமைந்து வீடு, வாகனம், சிறப்பான பதவி, செல்வம் செல்வாக்கு ஆகியவைகளைப் பெற்றுத் திகழ்வார்கள்.
 சந்திர யோகம்: ஒருவரது ஜாதகத்தில் லக்னம், சுபக்கிரகங்களின் பார்வையை பெற்றும்; லக்னாதிபதி நல்ல இடத்தில் அமர்ந்து முழுமையான பலமுள்ளவராகவும்; கிரகங்களின் சிறப்புப் பார்வையை பெற்றும்; ஐந்தாம் வீடு உச்சம் அல்லது ஆட்சி வீடாகவும் அமைந்தால் அது சந்திர யோகமாகும். இவர்கள் சிறந்த குடும்பத்தில் பிறந்தவராகவும் சகல விதமான நலன்களையும் பெற்று சகல சௌபாக்கியங்களுடன் விளங்குபவராகவும் நல்ல புத்திரர்களைப் பெற்று அவர்களால் பெருமை அடைபவராகவும் திகழ்வார்கள்.
பாக்கிய யோகம்: ஒருவரது ஜாதகத்தில் லக்னம் சுபக்கிரகங்களின் பார்வையை பெற்றும் லக்னாதிபதி நல்ல இடத்தில் முழுமையான பலமுள்ளவராகவும் கிரகங்களின் சிறப்புப் பார்வையைப் பெற்றும் ஒன்பதாம் வீடு உச்சம் அல்லது ஆட்சி வீடாக அமைந்தோ அல்லது அது லக்னாதிபதிக்கு 9 ஆம் வீடாக அமைந்தாலோ அது பாக்கிய யோகமாகும். இவர்கள் பல்லக்கில் செல்வார்கள் என்று உள்ளது. இந்த காலத்தில் சிறப்பான வாகனத்தில் மரியாதையுடன் பயணப்படுபவராக பெருமை அடைவார்கள். நிறை பெற்ற செல்வம் செல்வாக்கு இரண்டும் இருக்கும். மஹாலட்சுமியின் முழு அனுக்கிரகத்துடனும் தர்ம காரியங்களிலும் பித்ரு காரியங்களில் எவ்வித குறையுமில்லாமல் செய்யக்கூடியவராகவும் திகழ்வார். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் கலை, அரசியல், மதிநுட்பம் பெற்று மக்கள் மத்தியில் ஏதோ ஒரு வகையில் உயர்ந்து விடுவார்கள். சுக சௌகர்யங்களை எப்படியாவது அனுபவித்துக் கொள்வார்கள்.
ஆதி யோகம்: லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ 6,7,8 ஆம் இடங்களில் சுபக்கிரகங்கள் இருந்தால் அது லக்ன ஆதி யோகம் அல்லது சந்திர ஆதி யோகம் எனப்படுகிறது. இவர்கள் மனிதருக்குள் சிறந்தவர்களாகவும் உயர்ந்த பண்புகள் உள்ளவராகவும் அரசனுக்கு சமமான அந்தஸ்துகளைப் பெற்று விளங்குவார். வீடு, நிலம், வண்டி, வாகனம் ஏராளமான உதவியாளர்களைப் பெற்றிருப்பார்கள். இவரது செல்வம் நீண்ட காலத்துக்கு இருப்பதுடன் வளர்ச்சியும் பெருமையும் உடையதாக இருக்கும். பகைவர்களை வெற்றி கொள்ளும் பலமும் தைரியமும் உடையவராக இருப்பார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com