திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள சாய் நகரில் உலகிலேயே முதன் முறையாக சாஸ்தாவின் எட்டுவித அபூர்வ நிலைகளைக் கொண்ட நூதன ஆலயம் கீழ்தளம், மேல்தளமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஐயப்ப வழிபாட்டில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப் பெற்று, கலிகாலத்திற்கு உகந்தவாறு எட்டு வித அவதாரங்களை வடிவமைத்து கொடுத்து ஐயப்பனின் பாத கமலங்களை அடைந்தவர் குருசாமி பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா. அவரது முயற்சியின் பலனாகவே இன்று அஷ்டசாஸ்தா திருக்கோயில் அமையப் பெற்றுள்ளது.
கலியுகத்தில் பந்தள மகாராஜாவிடம் பாலகனாக வளர்ந்து மகிஷியை சம்ஹாரம் செய்தவர் ஐயப்பன். சுவாமி ஐயப்பனைசாஸ்தா, ஐயனார் என பல உருவங்களில் வழிபாடு செய்கின்றனர். சபரிமலையில் புலி வாகனனாகத் தோன்றி அங்கு கோயில் கொண்டார் சாஸ்தா.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தர்மசாஸ்தாவாம் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய முப்பெரும் தெய்வங்களின் சக்தியை தன்னகத்தே பெற்று ஈரேழ் உலகங்களையும் இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன் கடைக்கண் பார்வையினால் பார்த்து காத்து ரட்சிக்கிறார் கலியுக வரதனாம் ஸ்ரீ தர்மசாஸ்தா!
தர்மசாஸ்தாவின் எட்டு (அஷ்ட சாஸ்தா) அம்சங்களான கல்யாணவரதர், ஸ்ரீஞானசாஸ்தா, சந்தான ப்ராப்தி சாஸ்தா, மஹா சாஸ்தா, வீர சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, வேத சாஸ்தா, ஸ்ரீ ஆதிபூதநாதர் ஆகிய எட்டு வகையான சாஸ்தா இருப்பது பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த தர்மசாஸ்தா ஆலயத்தில் அஷ்ட சாஸ்தாக்களுக்கும் தனித்தனியே சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு, ஸ்ரீ சின்மய கணபதி, ஸ்ரீ பூர்ணாம்பிகா, ஸ்ரீ புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ரர் ஆகிய தெய்வங்களுக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இவ்வாலயத்தில் மே 25 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி சுதர்சண ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் மஹாகும்பாபிஷேக விழா துவங்குகின்றது. மே 27 -ஆம் தேதி (ஞாயிறு) காலை 11.00 மணிக்குமேல் விமானம், மூலவருக்கு மஹாகும்பாபிஷேக வைபவம் நடைபெறுகின்றது. மே 25,
யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகின்றது. பக்தர்கள் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ தர்மசாஸ்தாவின் பேரருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 94441 09431 / 99625 62067.
- மோகனா