அன்னையின் கருணை!
மகிழ்வை வாரி வழங்கும் நிகழ்வுகளில் முக்கியமானது பிறந்தநாள் கொண்டாட்டம்! அத்தகைய ஆனந்தம் தரும் நாள்களில் ஒன்றுதான் செப்டம்பர் 8 -ஆம் நாள். அன்றுதான் தேவ அன்னையான மரியாளின் பிறந்தநாள். வேளாங்கண்ணி மாதாவின் திருநாள்.
ஒன்பது நாள்களுக்கு முன்னதாகவே கொடியேற்றப்பட்டு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. நவநாள்கள் ஒன்பது நாள்களிலும் தினந்தோறும் செப வழிபாடுகள் பக்தி சிரத்தையோடு நடைபெறுகின்றன.
தமிழ்நாடு, கேரளம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜாதி மத வேறுபாடின்றி மக்கள் வந்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அன்னையின் அருளைப் பெறுகின்றனர்.
ஆற்றுவோர் அற்று அரற்றுகின்ற பலருக்கும் வேளாங்கண்ணியின் நூற்றுக்கணக்கான புதுமைகள் வாரந்தோறும் ஆற்றுப் பெருக்கினைப் போல் நிகழ்வது வழிபாட்டின் வல்லமையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அன்னையின் திருத்தலத்தில் நம்பிக்கையோடு, கலங்கிய கண்களோடு, உருக்கத்தோடு வேண்டும் கோடானு கோடி பக்தர்களின் காட்சியானது மெய்சிலிர்க்க வைக்கின்றது.
" உலகம் நினைப்பதைவிட ஓராயிரம் புதுமைகளை வலிமையுடன் நிகழ்த்திக்காட்டுகிறது வழிபாடு' என்று கவிஞர் டென்னிசன் பாடினார். செபமானது தவித்த பலரின் வாழ்வை மாற்றியிருக்கிறது. குவிந்த துன்ப மேகத்தை துரத்தியிருக்கிறது. இறுகிய இதயங்களை இளக வைத்திருக்கிறது.
ஆம், நம்பிக்கையுடன் வேளை நகர் அன்னையை தரிசிக்க சென்ற எவருமே வெறுங்கையுடன் திரும்பியதில்லை. பார்வையற்றோர் பார்க்கின்றனர். கேட்கும் திறனில்லாதோர் கேட்கின்றனர். தீராத நோய்கள் குணமாகின்றன. சிக்கல்களில் மாட்டியுள்ள மனிதர் தெளிவான தீர்ப்பு காண்கின்றனர். மன அழுத்தம் மாறியிருக்கிறது. உறவுப் பிரச்னைகளில் தெளிவு பிறக்கிறது. துணை தேடும் இளையோர் தகுந்த வாழ்க்கைத் துணையை கண்டடைகின்றனர். பிள்ளைப் பேறின்றி தவிக்கும் பெண்கள் குழந்தைபாக்கியம் பெறுகின்றனர். கேட்கும் எதுவுமே கிடைக்காமற் போயினும், கேட்காமலேயே மன அமைதியையும் புத்துணர்வையும் அருள்கிறாள் அன்னை. அன்னையின் கருணைக்கு எல்லையும் உண்டோ?
- பிலோமினா சத்தியநாதன்