எல்லையில் அத்துமீறி இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தினால், அதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு அந்நாட்டின் புதிய ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா அறிவுறுத்தியுள்ளார்.
எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே போர்ச் சூழல் மூண்டுள்ள நிலையில், இத்தகைய கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பாஜ்வா பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அந்நாட்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தற்போதைய சூழ்நிலை குறித்து பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் கலந்தாலோசித்த அவர், எல்லையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் அந்நாட்டு வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதாக பாராட்டினார்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்ட செய்தி: காஷ்மீரில் நிகழும் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களை உலக நாடுகளின் கவனத்திலிருந்து திசை திருப்புவதற்காகவே பாகிஸ்தான் எல்லையில் இந்தியா அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்களுக்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் ராணுவ வீரர்களை அவர் அறிவுறுத்தினார் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.