இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்க, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் கொள்கையை தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலைக் கட்சி உறுப்பினர் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
எந்தச் சூழ்நிலையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர் ஜெயலலிதா. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்தபோதெல்லாம், அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் அவர் என்றும் தயங்கியதில்லை.
மேலும், தமிழ் மக்களின் நலனுக்காக, இந்திய அரசு மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் ஜெயலலிதா தவறியதில்லை. அதேபோல், பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டதிலும் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வமும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் கொள்கையையும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் சிவாஜிலிங்கம்.