அமெரிக்க அதிபர் தேர்தல்: இறுதி விவாதத்தில் ஹிலாரி வெற்றி; ஏற்க மறுக்கும் டிரம்ப்
லாஸ் வேகாஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கும் இடையே நடைபெற்ற இறுதி விவாதத்தின் முடிவில், ஹிலாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஎன்என் / ஓஆர்சி இணைந்து நடத்திய ஆய்வில், டிரம்ப் 39% வாக்குகள் பெற்ற நிலையில், ஹிலாரி 52% வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த முடிவை தான் ஏற்க முடியாது என்றும், அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதியில் வெளியாகும் முடிவில் தான் தோற்றால்தான் தோல்வியை ஏற்றுக் கொள்வேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
'அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவில் பார்த்துக் கொள்ளலாம்' என்று டிரம்ப் கூறியதற்கு, அதிலும் தோல்வி அடைந்தால் என்று செய்தியாளர்கள் கேட்டனர். 'தேர்தலில் முறைகேடு நடந்திருக்கும்' என்று பதில் அளித்துள்ளார்.
டிரம்பின் இந்த கருத்துக் குறித்து ஹிலாரி கிளிண்டன் பேசுகையில், டிரம்பின் இந்த கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. அவருக்கு எதிராக முடிவு அமைந்தால் அதனை ஏற்க மறுப்பது தவறு என்றும் ஹிலாரி தெரிவித்தார்.
'ஜனநாயகத்தில் இது அழகல்ல. நாம் சுமார் 240 ஆண்டுகளாக இதனை பின்பற்றி வருகிறோம். நேர்மையான தேர்தலை நடத்தி வருகிறோம். அதன் முடிவு நமது விருப்பப்படி அமையவில்லை என்றாலும் அதனை ஏற்கத்தான் வேண்டும்' என்று ஹிலாரி கூறியுள்ளார்.
நவம்பர் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரியும், டிரம்பும் இதுவரை மூன்று முறை நேரடி விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். இது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு வழக்கமாகும்.