கொலை வழக்கில் சவூதி அரேபிய இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கைகலப்பின்போது ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில், இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, செவ்வாய்க்கிழமை இரவு நிறைவைற்றப்பட்டது.
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு ஷரியா சட்டத்தின்படி நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும், இளவரசருக்கு எந்த முறையைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விவரத்தை உள்துறை அமைச்சகம் வெளியிடவில்லை.
சவூதி அரேபியாவில் பெரும்பாலான மரண தண்டனைகள் தலையை வெட்டி நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு துப்பாக்கியால் சுட்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுண்டு.
உலகில் மிக அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றான சவூதியில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது மிகவும் அபூர்வமாகும்.
இதற்கு முன்னர், மன்னர் ஃபைஸலைப் படுகொலை செய்த குற்றத்துக்காக இளவரசர் ஃபைஸல் பின் முஸாய்து பின் அப்துல் அஜீஸ் அல் சவூதுக்கு கடந்த 1975-ஆம் ஆண்டு தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.