இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் காவலர் பயிற்சி கல்லூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் உயிர் பிழைத்தவர் ஒருவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
குவெட்டாவில் திங்கட்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 61 பயிற்சிக் காவலர்கள் உயிரிழந்தனர். 118 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் உயிர் தப்பித்த ஆசிஃப் ஹுசைன் கூறுகையில், காவலர் பயிற்சி மையத்துக்குள் பயங்கரவாதிகள் நுழைந்த போது நாங்கள் உறங்கிக் கொண்டிருந்தோம்.
துப்பாக்கிச் சுடும் ஓசை கேட்டு எழுந்த எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை. அவர்களை திருப்பித் தாக்க எந்த ஆயுதமும் இன்றி நிராயுதபாணிகளாக இருந்தோம் என்றார்.
ஜன்னல் வழியாக எங்கள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர் என்றார்.