தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் உத்தரவிட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த விவகாரத்தில்சம்பந்தப்பட்ட நாடுகள்தான் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெஹமூத் அக்தரை 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு பதில்நடவடிக்கையாக பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி சுர்ஜித் சிங்கை அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு தெரிவித்தது.
பதான்கோட், உரி தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம், அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தொழித்தது.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்தது.
ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது தூதரக அதிகாரிகள் மீது இரு நாடுகளும் பரஸ்பரம் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, வாஷிங்டனில் ஊடகங்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது இரு நாடுகளின் இறையாண்மை தொடர்பான முடிவு. இந்த விவகாரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடமே விட்டுவிடலாம்.
அந்த இரு நாடுகளும் ஆலோசித்தோ, பேச்சுவார்த்தை நடத்தியோ அல்லது வேறு சில சுமுக நடவடிக்கைகள் மூலமாகவோ இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றார் அவர்.