ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள 'உரி' ராணுவ முகாம் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அதிபரின் வெளிநாடு விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றுபவர் சர்தஜ் அஜீஸ். உரி தாக்குதல் சம்பவம் மற்றும் அதன் பின்னாலான நடவடிக்கைகள் பற்றி இவர் கூறியதாக, பாகிஸ்தான் இருந்து செயல்படும் 'ரேடியோ பாகிஸ்தான்' வானொலி செய்தி வெளிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் என்ன விதமான தாக்குதல் நடைபெற்றாலும், அது குறித்து எந்த விதமான விசாரணையும் நடத்தாமல், பாகிஸ்தான் தான் அதற்கு காரணம் என்று கூறுவது இந்தியாவுக்கு வாடிக்கையானது.
உரி தாக்குதல் சம்பவம் பற்றி ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் மூலம் விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலமே உண்மைகளை வெளிக்கொணர முடியும்.
இந்தியா இது போன்ற அடிப்படையற்ற குற்றசாட்டுகளை கூறுவது ஒன்றும் முதன்முறையல்ல. இது போன்ற குற்றசாட்டுகள் மூலம் காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களின் மீதான கவனம் திசை திருப்பப்படுகிறது.
இவ்வாறு அஜிஸ் பேசியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.