பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் தயார் நிலை குறித்து அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அவசர ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியவுடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதி ரஹீல் ஷெரீஃபும் தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது, ஆக்கிரமிரப்பு காஷமீரில் இந்திய ராணுவம் நிகழ்த்திய தாக்குதல் குறித்தும், உள்நாட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நவாஸிடம் ரஹீல் ஷெரீஃப் விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நஸீர் ஜன்ஜுவா, உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் ஆகியோர் அடுத்தடுத்து நவாஸ் ஷெரீஃபை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு நவாஸ் ஷெரீஃப் ஏற்பாடு செய்துள்ளார்.