லண்டன்: கடந்த வருடம் உலகின் மற்ற நாடுகளில் எல்லாம் சேர்த்து நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைகளை விட, சீனாவில் நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைகளின் எண்ணிக்கை அதிகம் என்று 'அம்னெஸ்டி இன்டெர் நேஷனல்' சர்வதேச அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனைகளுக்கு எதிராக 'அம்னெஸ்டி இன்டெர் நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையிடம் இங்கிலாந்தின் லண்டனில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனைகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2016-ஆம் ஆண்டை பொறுத்தவரை உலகம் முழுவதும் 1032 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இது முந்தைய ஆண்டை விட 37 சதவீதம் குறைவாகும். 2015-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 25 நாடுகளில் மொத்தம் 1634 பேர் மரண தண்டனை பெற்றுள்ளார்கள்.
இந்த ஆண்டில் சீனாவைத் தவிர மொத்தம் நிகழ்ந்துள்ள மரணங்களில் 87 சதவீத மரணங்கள் இரான், இராக், சவுத்தி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில்தான் நிகழ்ந்துள்ளன. 2006-ஆம் ஆண்டிலிருந்து தற்பொழுதுதான் அமெரிக்கா இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
சீனாவில் பெரும்பாலான மரணங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படுவதில்லை. அரசாங்க ரகசியங்களாக பாதுகாக்கப்படுகின்றன.