'உலகின் செல்வாக்கான மனிதர்': டைம் இதழின் வாக்கெடுப்பில் மோடிக்கு பின்னடைவு

டைம் இதழ் நடத்தும் உலகின் செல்வாக்கான மனிதருக்கான தேர்வில், இந்தியப் பிரதமர் மோடி ஒரு வாக்குக் கூட பெறாமல் பின்தங்கியுள்ளார்.
file photo
file photo


நியூ யார்க்: டைம் இதழ் நடத்தும் உலகின் செல்வாக்கான மனிதருக்கான தேர்வில், இந்தியப் பிரதமர் மோடி ஒரு வாக்குக் கூட பெறாமல் பின்தங்கியுள்ளார்.

ஆன்லைன் மூலமாக நடைபெற்ற உலகின் செல்வாக்கான 100 நபர்களுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் முதல் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலகில் அதிகக் கவனம் பெற்ற ஆங்கில வார இதழ் 'டைம்', ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய நிகழ்வுகளிலும் செய்திகளிலும் ஆதிக்கம் செலுத்திய நபரைத் தேர்வு செய்து அறிவித்து வருகிறது.

நேற்று இரவுடன் முடிந்த வாக்கெடுப்பில், அமெரிக்காவுக்கு எதிராக மோசமான கருத்துக்களை கூறி வரும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ வெற்றி பெற்ற நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் வெறும் 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் அதிபராக பதவியேற்றது முதல், அதிபர் ரோட்ரிகோ போதைப் பொருளுக்கு எதிராக தனது கடுமையான போரை நடத்தி வருகிறார். ஏழை, எளிய மக்களுக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளும் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

போதைப் பொருளுக்கு எதிராக இவர் எடுத்த நடவடிக்கைகளை கடுமையாக விமரிசித்து டைம் இதழ் கடந்த செப்டம்பர் மாதம் "பிலிப்பைன்ஸை இருள் சூழ்கிறது" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்கெடுப்பில், பிரதமர் மோடி ஒரு வாக்குகளைக் கூட பெறாமல் 'ஸீரோ பர்சென்டேஜ்' என்ற இடத்தில்  உள்ளார். இவருடன், இந்தியரான மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின், டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா உள்ளிட்ட ஏராளமானோர் ஒரு வாக்குகளையும் பெறவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2014ம் ஆண்டு டைம் இதழின் அதிக செல்வாக்கான மனிதர் என்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மோடி, 2017ம் ஆண்டின் வாக்கெடுப்பில் ஒரு வாக்குகள் கூட பெறாமல் பின்தங்கியுள்ளார்.

டைம் இதழ் நடத்தும் வாக்கெடுப்பின் முழு விவரம்:
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "டைம்' பத்திரிகை, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய உலகின் தலைசிறந்த 100 மனிதர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுதான் இறுதிப் பட்டியலைத் தயாரிக்கும் என்றாலும், அதற்கு முன்னர் இதுகுறித்த பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக பிரபலங்களின் பெயர்களை இணையதள வாக்கெடுப்புக்கு விடும்.

2015-ஆம் ஆண்டுக்கான தாக்கத்தை ஏற்படுத்திய 100 மனிதர்களில் ஒருவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும், கடந்த ஆண்டுக்கான "டைம்' பத்திரிகையின் இணையதள வாக்கெடுப்பிலும் மோடியின் பெயர் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இந்த வாக்கெடுப்பில் மோடியைத் தவிர, மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமைச் செயலதிகாரி சத்யா நாதெள்ளா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மகள் இவாங்கா மற்றும் மருமகனும், அதிபர் மாளிகை ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சீன அதிபர் ஜீ ஜின்பிங், கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. டைம் இதழ் வாக்கெடுப்பில் ஒரு தலைவரின் பெயர் இடம்பெறுவதே பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com