பெய்ஜிங்: சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு சதாம், ஜிஹாத் உள்ளிட்ட 12 பெயர்களை சூட்டக்கூடாது என சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த பெயர்களுக்கு சீன அரசு தடை விதித்திருப்பதால், இந்த பெயர் கொண்ட பிள்ளைகளுக்கு கல்வி கிடைப்பதிலும், அரசின் பலன்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று மனித உரிமை குழுமம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் ஜிங்ஜியாங் மாகாணத்தில் உய்கர் இஸ்லாமியர்கள் சீன அரசின் அடக்குமுறைக்கு உட்பட்டவர்களாக வாழ்கிறார்கள்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் சீன ராணுவம் பல்வேறு கெடுபிடிகளைப் பிறப்பித்து வருகிறது. அதில், ஒன்றாக, தற்போது சின்ஜியாங் மாகாணத்தில் வசிப்போர் தங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாம், குரான், மெக்கர், ஜிஹாத், இமாம், சதாம், ஹஜ், மெடினா என்ற பெயர்களை சூட்டக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவால், மேற்கண்ட பெயர்களைக் கொண்ட பிள்ளைகள், இனி பத்திரப்பதிவுகள் செய்தோ, அரசுப் பள்ளிகளில் கல்வி பயில்வதோ, சமூக சேவைகளில் ஈடுபடுவதோ இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் அமைப்புகள் இதற்கு கடுமையான விமரிசனத்தை முன் வைத்துள்ளன.