நியூ யார்க்: உலக அளவில் சிறந்த பொருட்களும், திறமையான நபர்களும் இன்றி அமெரிக்காவின் ஆப்பிள், சிஸ்கோ, ஐபிஎம் ஆகியவை இந்த அளவுக்கு வளர்ந்திருக்குமா என்று ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூ யார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிறகு பேசிய உர்ஜித் படேல், அமெரிக்காவின் தற்காப்புக் கொள்கையை கடுமையாக விமரிசித்துள்ளார்.
அதாவது, உலக அளவில் மிகத் திறமை வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு விலைகள் உலகெங்கிலும் இருந்து வந்த சிறந்த திறமைகள் இன்றி இந்த அளவுக்கு உயர்ந்திருக்குமா? என்றார்.
மேலும், உலக நாடுகளின் சிறந்த திறமைகள் இன்றி, ஆப்பிள் எங்கிருந்திருக்கும்? சிஸ்கோ எங்கே இருந்து இருக்கும்? ஐபிஎம் எங்கு இந்திருக்கும்? இதுபோன்ற வளர்ச்சிகளுக்குத் தடை ஏற்படும் வகையில் கொள்கைகள் வகுத்தால், அதுபோன்ற தற்காப்புவாதக் கொள்கைகளுக்கு ஆதரவு அளித்தால், அது ஒரு நாட்டின் செல்வ வளத்தை உருவாக்கும் காரணிகளைத்தான் பாதிக்கும் என்றும் உர்ஜித் படேல் குறிப்பிட்டார்.
தற்காப்புவாதக் கொள்கைகளை அறிவித்து அதனை செயல்படுத்த, சுங்கத்தீர்வைகளும், எல்லை வரிகள் விதிப்பது மட்டுமே போதுமானது அல்ல. இது ஒரு கட்டத்தில் நின்று போகும். இது உள்நாட்டு கொள்கை முடிவு, இதில் பொருந்தாத சில கொள்கைகள் குறித்து எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்றும் படேல் கூறினார்.