இலங்கையின் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தித் தருவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தில்லியில் அவரை மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது சாலை கட்டுமானத்தில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
நிதின் கட்கரியுடனான ஆலோசனையின்போது, யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரையிலான சாலை, மன்னார் முதல் வவுனியா வரையிலான சாலை, தம்புல்லா முதல் திரிகோணமலை வரையிலான சாலை ஆகிய முக்கிய சாலைகளை இந்திய அரசு மேம்படுத்தித் தர வேண்டும் என்று விக்ரமசிங்கே அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் பிராந்தியம் வளர்ச்சியடைவதற்கு, இந்த சாலைகள் மேம்படுத்தப்படுவது மிகவும் முக்கியம் என்று ரணில் தெரிவித்தார்.
இதையேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மேற்கண்ட சாலைகளை உலகத் தரத்தில் மேம்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசும், தனது அமைச்சகமும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று உறுதியளித்தார் என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் யாழ்ப்பாணமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.