இஸ்லாமாபாத்; பாகிஸ்தானின் 18-ஆவது பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரிப். 'பனாமா ஆவணங்கள்' ஊழல் வழக்கில் இவருக்கும், இவரது குடும்பத்தாருக்கும் தொடர்பு இருப்பதாகப் பேசப்பட்டது. விசாரணையில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடரவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றதால் கடந்த வாரம் நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பஞ்சாப் முதல்வரும், நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரருமான ஷேபாஸ் ஷெரீஃப், அக்கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் எம்.பி யாக இல்லாத காரணத்தால், அதுவரை ஷாஹித் அப்பாஸி பிரதமராக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஷாஹித் அப்பாஸி 221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு ஆறுமுறை தேர்தெடுக்கப்பட்ட இவர், ஷேபாஸ் ஷெரீஃப் பொறுப்பேற்றுக் கொள்ளும் வரை இடைக்காலப் பிரதமராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.