மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரைவாகவும், எளிமையுடனும் கம்ப்யூட்டரை இயக்கும் விதமாக புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் கம்ப்யூட்டர் உபயோகிப்பரவரின் கண் அசைவுக்கு அத்தனையும் கட்டுப்படும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக கீபோர்ட் மற்றும் மௌஸ் ஆகியவற்றை இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை உபயோகிப்பவர் கம்ப்யூட்டரில் தனக்கு தேவையான ஃபைலை பார்ப்பதன் மூலம் அதில் அவர் தேவைக்கான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
இந்த தொழில்நுட்பமானது 'டோபி ஐ ட்ரேக்கர் 4சி' என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் பரிசோதனை முயற்சியாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் தலைமை மென்பொறியாளர் டோனா சர்கார் கூறியதாவது:
விண்டோஸ் இயங்குதளங்களில் முதலில் இந்த சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதனைத்தொடர்ந்து, ஐ கன்ட்ரோல் என்ற வசதியை ஆக்டிவேட் செய்து அதன்மூலம் கம்ப்யூட்டரில் தோன்றும் மௌஸ் மற்றும் கீபோர்ட் ஆகியவற்றிடம் பார்த்தும், பேசியும் இயக்க முடியும்.
முதலாவதாக, ஐ கன்ட்ரோல் மென்பொருளை உற்று நோக்குவதன் மூலம் இதனை உபயோகிக்க முடியும். நாம் எதை பார்க்கின்றோம் என இதனால் துல்லியமாக கணிக்க முடியும். அதற்கேற்ப இது இயங்கும் திறன் படைத்தது.
இருப்பினும், சூரிய ஒளி அதிகம் உள்ள இடங்களில் இந்த வசதியை உபயோகிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, அதனை சரிசெய்யும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் பல்வேறு ஒளித்திறன் படைத்த இடங்களிலும் சுலபமாக இந்த வசதியை பயன்படுத்தும்படி மேம்படுத்தப்பட்டு வருகிறது. நாம் இந்த வசதியை உபயோகப்படுத்தி முடித்த பின்னர் அதேபோன்று இயக்கி நிறுத்தவும் இயலும் என்றார்.