டோக்யோ: கையில் வாங்கியவுடன் உருகி வழியும் ஐஸ்க்ரீமினை இதுவரைக் கண்டு வந்திருக்கும் நமக்கு, ஜப்பான் விஞ்ஞானிகளின் 'உருகாத ஐஸ்க்ரீம்' கண்டுபிடிப்பு ஆச்சர்யத்தினை அளிக்கிறது.
மெஷினில் இருந்து எடுத்து கோனிலோ அல்லது ஏதாவது பாத்திரத்திலோ வைத்தவுடன் உருகி வழிவது ஐஸ்க்ரீமின் இயல்பு. எனவே நாம் அதனை அவசர அவசரமாக சாப்பிட வேண்டி இருக்கும் ஆனால் தற்பொழுது 'உருகாத ஐஸ்க்ரீம்' ஒன்றினை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பானின் கனசாவா பல்கலைக்கழகத்தின் ஆய்வு விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பினை செய்துள்ளனர். இதன் மூலம் ஐக்ரீமின் வடிவம் வெகு நேரத்திற்கு மாறாமல் அப்படியே இருப்பதற்கு அதன் உருகுநிலையை அதிகரிப்பதே வழி என்று கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக கனசாவா பல்கலைக்கழக பேராசிரியர் டொமிஹிஸா ஒட்டா கூறியதாவது:
இதனை சாத்தியமாக்குவதற்கு பாலிபினால் என்ற திரவம் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ட்ராபெரியில் இருந்து எடுக்கப்படும் இந்த திரவம் கொண்டுள்ள தன்மையானது, இதனை பொதுவாக எண்ணெய் மற்றும் தண்ணீர் கொண்டு பிரிப்பதற்கு சிரமமாக மாற்றுகிறது.
எனவே இந்த திரவத்தினை ஐஸ்க்ரீமுடன் சேர்க்கும் பொழுது, வழக்கமான நேரத்தினை விட அதிக நேரம் ஒரே உருவத்தில் இருக்கவும், எளிதில் உருகாத ஒன்றாகவும் மாற்றுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதன்படி அறை வெப்ப நிலையில் குறைந்த பட்சம் மூன்று மணி நேரத்திற்கு ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும். இதனை சோதிப்பதற்கு அவர்கள் கேசத்தினை உலர்த்த பயன்படுத்தப்படும் 'ஹேர் ட்ரையரை' பயன்படுத்தி ஐஸ்க்ரீம் மீது தொடர்ந்து ஐந்து நிமிடம் வெப்பக்க காற்றினை செலுத்தினார்கள். ஆனால் அதற்கு பிறகும் அது தனது இயல்பான வடிவத்தினை விரைவாக அடைந்து விட்டது
இந்த ஐஸ்க்ரீமானது ஸ்ட் ராபெரி, சாக்லேட் மற்றும் வெனிலா ஆகிய சுவைகளில் கிடைக்கிறது