வட கொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல்: டிரம்ப் மறைமுக எச்சரிக்கை உலக நாடுகள், எதிர்க்கட்சிகள் அதிருப்தி

அமெரிக்காவை வட கொரியா மிரட்டுவது தொடர்ந்தால், உலகம் இதுவரை காணாத அளவு சக்தி கொண்ட தங்களது 'கோப நெருப்பை' வட கொரியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிபர் டொனால்ட்
குவாம் தீவில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் (கோப்புப் படம்).
குவாம் தீவில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் (கோப்புப் படம்).

அமெரிக்காவை வட கொரியா மிரட்டுவது தொடர்ந்தால், உலகம் இதுவரை காணாத அளவு சக்தி கொண்ட தங்களது 'கோப நெருப்பை' வட கொரியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதத் தாக்குதலைக் குறிப்பிட்டே டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார் என்று கருதப்படும் நிலையில், அவரது இந்தப் பேச்சு குறித்து சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வரும் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
எனினும், தென் கொரியாவுடன் இணைந்து தங்கள் நாட்டின் மீது படையெடுக்க அமெரிக்கா முயன்று வருவதாகக் குற்றம் சாட்டி வரும் வட கொரியா, அணு ஆயுதம் தாங்கி அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை அண்மையில் வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
மேலும், ஏவுகணைகளின் முனைகளில் பொருத்தும் அளவுக்கு வட கொரியாவின் ஏவுகணைகளை அந்த நாட்டு விஞ்ஞானிகள் சிறிதாக வடிமைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தச் சூழலில், வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மேலும் கடுமையாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு பசிபிக் கடலிலுள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு அருகே தனது ஹுவாஸாங்-1 ஏவுகணைகளை ஏவி சோதிக்கப் போவதாக வட கொரியா கூறியது.
இதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூ ஜெர்ஸி நகரிலுள்ள தனது சுற்றுலா மாளிகையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அமெரிக்காவை மிரட்டுவதை வட கொரியா இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.


இதற்கு மேலும் அமெரிக்காவை மிரட்டினால், வட கொரியா அமெரிக்காவின் 'கோப நெருப்பின்' உக்கிரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அந்தக் 'கோப நெருப்பு' எவ்வளவு சக்தி கொண்டதாக இருக்கும் என்றால், அந்த சக்தியை இதுவரை உலகமே பார்த்திராத அளவுக்கு இருக்கும் என்றார் டிரம்ப்.
டிரம்பின் இந்தப் பேச்சுக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களும், தன்னார்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வட கொரியாவை இத்தனை ஆண்டுகாலம் தனிமைப்படுத்தினாலும் அந்த நாடு அணு ஆயுதம் தயாரிப்பதையோ, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை தயாரிப்பதையோ தடுக்க முடியவில்லை.
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
சீனா எச்சரிக்கை
டொனால்ட் டிரப்பின் பேச்சு குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாகும்.
இந்த விவகாரத்தில் மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சிறிய வார்த்தைகளோ, செயல்களோ கூட மிகப் பெரிய போருக்கு வித்திட்டுவிடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்பின் பேச்சு குறித்து ஜெர்மனியும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com