சீனாவில் அதிகளவில் உபயோகிக்கப்பட்டு வரும் மிகப்பெரிய சமூக வலைதளப் பக்கங்களான வேபிடோ, வீ சேட் மற்றும் பைடு டேய்பா உள்ளிட்டவை அந்நாட்டு சைபர் கிரைம் குற்றப்பிரிவு அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இதுபோன்ற சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதம் உள்ளிட்ட தவறான செயல்களுக்கு அதிகளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே அதனை தடுக்கும் வகையில் இந்த சமூக வலைதளங்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாட்டில் ஏற்படும் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் அழிக்கப்பட அதிகளவில் வாய்ப்புள்ளது.
இதில் குறிப்பாக வேபிடோ, வீ சேட் மற்றும் பைடு டேய்பா உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சீனர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் முக்கிய நபர்கள் 60 பேர் குறித்து தவறான தகவல்கள் இவற்றில் வெளியாகின.
எனவே சமூக வலைதள மாண்புகளைக் காக்கும் வகையில் கடந்த மே மாதம் புதிய விதி அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் அனைத்து சமூக வலைதள பக்கங்கள், ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் உள்ளிட்டவை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரால் சீர்செய்யப்படும்.
இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சீனாவில் உள்ள இணையதள சேவைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இதர நாடுகளின் சமூக வலைதள சேவைகளான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மற்றும் ட்விட்டர் உள்ளிட்டவை சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதுபோல கூகுள் தேடுதளத்திலும் இதர நாடுகளின் வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.