அமெரிக்காவுக்கு வட கொரியா பகிரங்க மிரட்டல்: தீவைத் தாக்கும் திட்டத்தை வெளியிட்டது

அமெரிக்காவின் அதிகாரத்துக்கு உள்பட்ட குவாம் தீவைத் தாக்கும் திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டு பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளது வட கொரியா.
அமெரிக்காவை மிரட்டும் வகையில் வட கொரிய அரசு தொலைக்காட்சி வியாழக்கிழமை வெளியிட்ட ஏவுகணைத் தாக்குதல் திட்டம்.
அமெரிக்காவை மிரட்டும் வகையில் வட கொரிய அரசு தொலைக்காட்சி வியாழக்கிழமை வெளியிட்ட ஏவுகணைத் தாக்குதல் திட்டம்.

அமெரிக்காவின் அதிகாரத்துக்கு உள்பட்ட குவாம் தீவைத் தாக்கும் திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டு பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளது வட கொரியா.
மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளது குவாம் தீவு. இது அமெரிக்க அதிகாரத்துக்கு உள்பட்ட பகுதியாகும். வட கொரியாவிலிருந்து சுமார் 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தீவை ஏவுகணை கொண்டு தாக்குவதற்கான திட்டத்தை அந்த நாடு வெளியிட்டிருக்கிறது.
வட கொரியாவின் அரசு தொலைக்காட்சியில் விரிவான வரைபடங்களுடனும் விளக்கங்களுடனும் தாக்குதல் திட்டம் வெளியிடப்பட்டது.
குவாம் தீவு தன்னாட்சிப் பிரதேசமாக உள்ள போதிலும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியிலிருந்து எழக் கூடிய எதிரிகளின் தாக்குதலை முறியடிக்க குவாம் தீவில் அமெரிக்காவின் முப்படைகளும் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மிக நீண்ட தொலைவு பறந்து தாக்குதல் நடத்தும் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட அதிகத் திறன் கொண்ட பாதுகாப்பு அரண் அமெரிக்காவால் அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குவாம் தீவைத் தாக்கும் விரிவான திட்டத்தை வட கொரியா வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து வட கொரிய ஏவுகணைப் பிரிவு தளபதி கிம் ராக்-கி யோம் கூறியது:
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் உக்கிரத் தாக்குதல் அறிவிப்பு வெறும் பிதற்றல். நடுநிலை, நியாய உணர்வு இல்லாதவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இயலாது. அமெரிக்காவின் ஆட்சிக்கு உட்பட்ட குவாம் தீவைத் துல்லியமாகத் தாக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத மத்திக்குள் திட்டம் பூர்த்தியாகிவிடும்.
குவாம் தீவுத் தாக்குதலின்போது ஒரே நேரத்தில் நான்கு ஏவுகணைகள் செலுத்தப்படும். அந்த ஏவுகணைகள் ஜப்பானின் ஷிமானே, ஹிரோஷிமா, கோயிச்சி பகுதிகளின் வான் எல்லைக்கு மேல் பறந்து சென்று குவாம் தீவைத் தாக்கும். அந்த ஏவுகணைகள் விண்ணில் 17 நிமிடங்கள், 45 விநாடிகளுக்குப் பறந்து செல்லும்.
விண்ணில் செலுத்தப்பட்டதும், 3,356.7 கி.மீ. தொலைவு பறந்து குவாம் தீவிலிருந்து 30 கி.மீ. முதல் 40 கி.மீ. தொலைவில் கடலில் விழச் செய்வோம். வேண்டுமானால் இலக்கை அதிகரிக்கச் செய்ய முடியும்.
இந்த விரிவான தாக்குதல் திட்டம் அதிபர் கிம் ஜோங்-உன்னின் பரிசீலனைக்காக அளிக்கப்பட உள்ளது. அவரது கட்டளைப்படி அடுத்தகட்ட நடவடிக்கையை பாதுகாப்புப் படைகள் மேற்கொள்ளும் என்று வட கொரிய பாதுகாப்புப் படைகளின் ஏவுகணைகள் பிரிவு தளபதி கூறியள்ளார்.
வட கொரியாவின் ஆயுதப் பரிசோதனைத் திட்டங்களைக் கைவிடவில்லை என்றால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நிகழ்த்தும் என்று அதிபர் டிரம்ப் கடந்த புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தார். அதற்கு அடுத்த நாளே வட கொரியாவின் விரிவான தாக்குதல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அணு ஆயுதத் திறன் முன்னெப்போதையும் விட மிக அதிகமாக உள்ளது என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
உலகம் இதுவரை கண்டிராத உக்கிரத் தாக்குதலை வட கொரியா எதிர்கொள்ள நேரிடும் என்றார் அவர்.
கடந்த ஜூலை மாதம் இரு சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக வட கொரியா பரிசோதனை செய்தது.
மேலும் பல வகை ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் செலுத்தும் திறனுடன், அணு ஆயுதத் திறனையும் வட கொரியா பெற்றுவிட்டது. அமெரிக்காவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் திறனைப் பெற்றுவிட்டதாக அந்நாடு கூறி வருகிறது. அது வெறும் பேச்சல்ல என்றும், வட கொரியாவின் தாக்குதல் திறன் உண்மையானதுதான் என்றும் மேற்கத்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com