கெய்ரோ: எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரின் கெய்ரோவிற்கும் இடையே உள்ள கோர்ஷின் நிலையத்திற்கு அருகில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
ஒரு ரயில் தலைநகர் கெய்ரோவில் இருந்து வந்துள்ளது. மற்றொரு ரயில் கோர்சித் பகுதியில் உள்ள போர்ட் செய்ட்டில் இருந்து வந்துள்ளது.
இந்த கோர விபத்தில் 29 பேர் பலியானதாக முதலில் தகவல்கள் வெளியானது. பின்னர் தற்போதையை நிலவரப்படி 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு குழுவினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு அதிபர் எல்.சி.சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் எகிப்தில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்து இது தான் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எகிப்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு இதே போன்ற கோர விபத்தில் ரயில்கள் மோதி 373 பேரும், 2013 ஆம் ஆண்டு கிஸாவில் நிகழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்னல் மாற்றி போடப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.