ஈரானில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து செம்பிறை சங்கம் தெரிவித்ததாவது:
ஈரானில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக , ஐந்து மாகாணங்களின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி கோர்ஸான் ராஸவி பகுதியில் 9 பேர் பலியாகினர். மேலும், கோலிஸ்தானில் இருவரும், வடக்கு கோர்ஸானில் ஒருவரும் உயிரிழந்தனர்.
கோலிஸ்தான் மாகாணத்தில் மூன்று பேர் சென்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்தக் காரில் பயணம் செய்த பெண் சடலம் பின்னர் கண்டெடுக்கப்பட்டது. காணாமல் போன மற்ற இருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.