கென்யா அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராகத் தொடர் வன்முறை: 11 பேர் பலி

கென்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்ட வன்முறைக்கு 11 பேர் பலியாகினர்.
கென்யா தலைநகர் நைரோபியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர்.
கென்யா தலைநகர் நைரோபியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர்.

கென்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்ட வன்முறைக்கு 11 பேர் பலியாகினர்.

கென்யா அதிபர் தேர்தலில் உஹுரு கென்யாட்டா வெற்றி பெற்றதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக அதிபராகிறார். எனினும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராயிலா ஒடிங்கா தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தார். வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். கடந்த 2007, 2013 ஆண்டுகளில் நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் அவர் போட்டியிட்டுத் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை ஏற்க முடியாது என்று கூறி வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது. அந்த ஆர்ப்பாட்டங்களின்போது வன்முறை வெடித்தது. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் பலியானதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
எனினும், போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சிக்கட்சிகளின் கூட்டமைப்பு கூறி வருகிறது.
ஆர்ப்பாட்டங்களுக்கிடையில் சமூக விரோதிகள் நிகழ்த்தி வரும் வன்முறை, துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலியாகியுள்ளனர் என்று போலீஸார் கூறினர்.
இதனிடையே, அதிபர் தேர்தலைக் கண்காணித்த இ.எல்.ஓ.ஜி. என்ற அமைப்பு, தேர்தல் நியாயமாக நடைபெற்றதாகவும், முடிவுகள் ஏற்கத் தக்கவை என்றும் கூறியுள்ளது.
தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சியினர் ஏற்று, வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர உதவ வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்தார்.
அதிபர் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கென்யாட்டாவுக்கு ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை தலைமை இயக்குநர் ஃபெடரிகா மொகேரினி வாழ்த்து தெரிவித்தார். கென்யாவில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் கூறியது: அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய ராயிலா ஒடிங்கா சிறந்த ஜனநாயகவாதி. அவர் தனது கடுமையான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
கென்யாவில் அனைத்து இனத்தவரையும் உள்ளடக்கிய அரசை அதிபர் கென்யாட்டா அமைத்து ஆட்சி புரிய வேண்டும். எதிர்க்கட்சியினரையும் அரசில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2007-இல் நிகழ்ந்த தேர்தல் வன்முறையில் 1,100 பேர் உயிரிழந்தனர். இரண்டு மாதங்கள் தொடர்ந்த வன்முறையில் 6 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com