லாகூர்: பாகிஸ்தானின் 70-ஆவது சுதந்தர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தெற்காசியாவிலேயே மிக உயரமான கொடியை ஏற்றியுள்ளது பாகிஸ்தான்.
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா அருகே நள்ளிரவு 12 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி, இந்த கொடியை ஏற்றி வைத்தார்.
பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட இந்த கொடி 400 அடி உயரக்கம்பத்தில் பறக்கப்பட்டது. அது 120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்டது.
400 அடி உயரத்தில் ஏற்றப்பட்டிருக்கும் பாகிஸ்தான் தேசியக் கொடி தெற்காசிய அளவில் மிகப்பெரிய தேசியக் கொடி என்ற பெருமையையும், உலக அளவில் எட்டாவது மிகப்பெரிய கொடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய தளபதி பஜ்வா, நாட்டின் சுதந்தரத்துக்காகப் போராடி உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை மறக்கவே முடியாது. பாகிஸ்தானில் இருக்கும் ஒரு பயங்கரவாதியைக் கூட நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். நாட்டின் எதிரிக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான், அவர்கள் கிழக்கில் இருக்கிறார்களோ, மேற்கில் இருக்கிறார்களோ, ஆனால், உங்கள் துப்பாக்கித் தோட்டாக்கள் வேண்டுமானால் தீர்ந்துபோகும், எங்கள் வீரர்களின் தோள்கள் அல்ல என்று தெரிவித்தார்.