இனவாத வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது: ஐ.நா. செயலர் கருத்து
இனவாத வன்முறைக்கும் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் சமூகத்தில் இடமளிக்கக் கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.
அவர் சார்பில் அவரது துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அனைத்து விதமான இனவாதத்துக்கும் இன துவேஷத்துக்கும் எதிராக ஐ.நா. கருத்து தெரிவித்து வந்துள்ளது. உலகின் எந்தப் பகுதியிலும் இனவெறி, இனவாத சிந்தனை, இனவாத அடிப்படையிலான வன்முறை, யூதர்களுக்கு எதிரான வெறுப்பு, பல்வேறு பிரிவினருக்கு இடையிலான பாரபட்சம் ஆகியவற்றுக்கு இடமளிக்கக் கூடாது.
அண்மையில் அமெரிக்காவில் சார்லட்ஸ்வில்லில் நடைபெற்ற வன்முறை கண்டனத்துக்கு உரியது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொதுச் செயலர் தனது இரங்கûலைத் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம், சார்லட்ஸ்வில் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற இனவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது கூட்டத்தினரிடையே காரை வேகமாக ஓட்டி வந்து மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் 19-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்க் கால தளபதியின் சிலையை அகற்ற வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருப்பின மக்களை அவமதிக்கும் சின்னமாக அந்தச் சிலை உள்ளது என்று கூறி, வெள்ளையர் ஆதிக்க மனப்பான்மையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் சிலையை அகற்றக் கூடாது என்று ஒரு பிரிவினர் கூறிவந்தனர். கண்டன ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே வேகமாக ஓட்டி வந்த கார் ஒரு பெண்ணின் உயிரை பலி வாங்கியது. இதனிடையே இந்த ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்க வட்டமடித்த ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் இரு காவலர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இரு தரப்பினரின் வன்முறையையும் கண்டித்து அதிபர் டொனால்ட் அறிக்கை வெளியிட்டார். ஆனால் வெள்ளை ஆதிக்கக் குழுவினரைத்தான் அவர் கண்டித்திருக்க வேண்டும் என்று டிரம்ப்புக்கு எதிராக விமர்சனம் எழுந்தது. இந்த சம்பவத்தை அதிபர் டிரம்ப் போதிய அளவு கண்டிக்கவில்லை என்று கூறி அவரது தொழில் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்ற கருப்பினத்தவர் உள்பட மூன்று மூத்த தொழிலகத் தலைவர்கள் அந்தக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.