பிலிப்பின்ஸில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் 21 பேரை காவல் துறையினர் ஒரே நாளில் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
பிலிப்பின்ஸின் வடக்கில் உள்ள புலாகேன் மாகாணத்தில் போதை மருந்து கடத்தல் தொடர்பாக காவல் துறையினர் திங்கள்கிழமை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், போதை மருந்து கடத்தல் குற்றவாளிகள் 21 பேர் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 54 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையினர் கைது நடவடிக்கைக்கு எதிராக கடத்தல்காரர்கள் ஆயுதங்களை பயன்படுத்த முற்பட்டேபோது இந்த சம்பவம் நடைபெற்றது. பிலிப்பின்ஸ் அதிபராக பொறுப்பேற்ற ரோட்ரிகோ டுடேர்தே போதை மருந்துக்கு எதிரான போரை கடந்த ஆண்டு ஜூலையில் அறிவித்த பிறகு ஒரே நாளில் போதை மருந்து குற்றவாளிகள் அதிக எண்ணிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை என்றார் அவர்.
போதை மருந்து கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது காவல் துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரையில் 3,264 பேர் கொல்லப்பட்டனர். மேலும், போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கிடையேயான மோதல்களில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
போதை மருந்து கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர் விசாரணை ஏதுமின்றி கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.